சாரதா சிட்பண்ட் ஊழல்.. கொல்கத்தா மாஜி கமிஷனருக்கு லுக் அவுட் நோட்டீஸ்.. சிபிஐ அதிரடி
Array
டெல்லி: நாட்டின் பிரபலமான வழக்குகளில் ஒன்றான சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கில் மேற்குவங்க முன்னாள் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து அதிரடி காட்டியுள்ளது.
மேற்குவங்கத்தை சேர்ந்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறியதால் பல மாநிலங்களை சேர்ந்த மக்கள் இந்த சிட்பண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். பணம் முதிர்ச்சி அடைந்த பின்னும் இந்நிறுவனம் பணத்தை தரவில்லை. இதில் கிட்டத்தட்ட ரூ.10 ஆயிரம் கோடிவரை முறைகேடு செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டது.
சாராத சிட்பண்ட் நிறுவனத்தின் தலைவர் சுசில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. அதோடு தமிழகத்தை சேர்ந்த சில அரசியல்வாதிகளுக்கும் இதில் தொடர்பு உண்டு என்று கூறப்படுகிறது. பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு பணம் திருப்பி கிடைக்காததால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிகழ்ந்த வன்முறையில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
பின் இவ்வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு தலைவராக ராஜீவ் குமார் இருந்தார். இவரின் தலைமையில் விசாரணை முறையாக நடைபெறவில்லை என்பதால், விசாரணையை சிபிஐக்கு நீதிமன்றம் மாற்றி உத்தரவிட்டது. ராஜீவ் குமார் சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவராக இருந்தபோது, வழக்கின் விசாரணை தொடர்பான ஆதாரங்களான செல்போன், லேப்டாக், ஆவணங்கள் ஆகியவற்றை அழித்துவிட்டதாக வழக்கை விசாரித்த சிபிஐ குற்றம் சாட்டியது.
சிபிஐ அதிகாரிகள் ராஜீவ் குமாரின் வீட்டில் தேடுதல் நடத்த முயன்ற போது கொல்கத்தா போலீஸாருக்கும், சிபிஐக்கும் மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து முதல்வர் மம்தா பானர்ஜி ராஜீவ் குமாருக்கு ஆதரவாகவும், சிபிஐ அமைப்பைக் கண்டித்தும் உண்ணாவிரதம் இருந்தார். இதையடுத்து ராஜீவ் குமாரை விசாரணைக்கு ஒத்துழைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனுத் தாக்கல் செய்தது.
உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டினால் சிபிஐ விசாரணைக்கு ராஜீவ் குமார் ஆஜராகினார். இருந்தபோதிலும் அவர் விசாரணையின்போது சிபிஐக்கு ராஜீவ் குமார் ஒத்துழைக்கவில்லை என்று சிபிஐ குற்றம் சாட்டியது .இதனையடுத்து அவரை கைது செய்ய விதித்திருந்த தடையை உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் விலக்கியது. இதைத்தொடர்ந்து ராஜீவ் குமார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ஆனால் நீதிமன்றம் அந்த மனுவை நிராகரித்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டது.
இச்சூழலில்தான் தகுந்த ஆதாரங்களுடன் ராஜீவ் குமாரைக் கைது செய்ய சிபிஐ காத்திருக்கிறது. ராஜீவ் குமாருக்கு இன்னும் முன் ஜாமீன் கிடைக்கவில்லை. ராஜீவ் வெளிநாட்டிற்கு தப்பாமல் இருக்க சிபிஐ லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இப்போது ராஜீவ்குமார் தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர் விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முயன்றால் விமான நிலைய அதிகாரிகள் சிபிஐக்கு தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.