என்னோட கருத்தையும் கேளுங்க.. என்ட்ரி கொடுத்த சசிகலா.. உச்சநீதிமன்றத்தில் அதிரடியாக கேவியட் மனு தாக்கல்
அதிமுக பொதுச்செயலாளர் பதவி வழக்கில் சசிகலா உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்
டெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பான வழக்கில் இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தால் தமது தரப்பு கருத்தையும் கேட்க கோரி உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். அப்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் சசிகலா முதல்வராக முயற்சித்தார். ஆனால் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கி சசிகலா சிறை தண்டனையை அனுபவிக்க நேரிட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார் சசிகலா.
அப்போது அதிமுக பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராகவும் சசிகலா நியமித்துவிட்டு சிறைக்கு சென்றார். இந்த கால கட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பு இணைந்து கொண்டது. இதனைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா, தினகரன் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். அத்துடன் அதிமுகவில் புதியதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ப்தவிகள் உருவாக்கப்பட்டன.
2017 செப்டம்பரில் தம்மை நீக்கிய அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். ஆனால் சசிகலாவின் இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மனுத் தாக்கல் செய்தனர். நீண்டகாலம் நிலுவையில் இருந்த நிலையில் சசிகலாவின் மனுவை உரிமையியல் நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது.
மாஜி அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து-உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அப்பீல்
சென்னை உரிமையியல் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். சசிகலாவின் இந்த மனுவை நிராகரிக்க கோரி இபிஎஸ் தரப்பில் செம்மலை ஒரு மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், வழக்கின் மதிப்புக்கு ஏற்ப நீதிமன்ற கட்டணம் செலுத்த சசிகலாவுக்கு உத்தரவிட வேண்டும்; அப்படி கட்டணம் செலுத்தாவிட்டால் சசிகலாவின் மேல்முறையீட்டு வழக்கை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என அதிமுகவின் அமைப்பு செயலாளர் என்ற அடிப்படையில் செம்மலை மனுத் தாக்கல் செய்தார். ஆனால் செம்மலையின் இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் இபிஎஸ் தரப்பு தமது மனு தள்ளுபடி செயப்பட்டதால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், பொதுச்செயலாளர் பதவி நீக்க வழக்கில் இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்; அப்படி மேல்முறையீடு செய்யும் போது தமது தரப்பு கருத்தையும் கேட்ட பின்னரே உத்தரவிட வேண்டும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.