அதிமுகவில் மீண்டும் சசிகலா.. "முக்கிய பதவியோடு" ரீ என்ட்ரி? பரபரக்கும் டெல்லி
டெல்லி: அதிமுகவில் மீண்டும் சசிகலா இணைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், அவருக்கு பொதுச் செயலாளர் பதவி வழங்குவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும், இதுதொடர்பாக டெல்லியில் இன்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த சட்டசபை தேர்தலின்போது சசிகலா அதிமுகவில் சேர்க்கப்படாத நிலையில் தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அமைச்சர்களாக இருந்த ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் கூட தோல்வியைச் சந்தித்தனர்.
வன்னியர் உள் இட ஒதுக்கீடு வழங்கியும் கூட வழக்கு மண்டலங்களிலும் அதிமுகவை விட திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தெற்கே சரியும் வாக்குகளை வடக்கே வைத்து சரி செய்யலாம் என்ற எடப்பாடி பழனிசாமியின் திட்டம் பலிக்கவில்லை.
சசிகலா விவகாரம், அதிமுக மோதல்... டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஓ.பி.எஸ், ஈ..பி.எஸ் நாளை சந்திப்பு
எடப்பாடி பழனிச்சாமியை கடிந்து கொள்ளாத சசிகலா
கொங்கு மண்டலத்தில் மட்டும் வழக்கம் போல அதிமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதையெல்லாம் பார்த்து தான் மறுபடியும் அதிமுகவுக்கு வருவதற்கு சசிகலா திட்டமிட்டு காய் நகர்த்த ஆரம்பித்தார். அதிமுக தொண்டர்கள் உடன் தொலைபேசியில் உரையாடி அந்த ஆடியோ வெளியே கசிய விடப்பட்டது. முன்னணி தொலைக்காட்சி சேனல்களுக்கு வரிசையாக பேட்டியளிக்க ஆரம்பித்தார். அந்த பேட்டியில் அவர் ஒரு விஷயத்தில் ரொம்பவே உறுதியாக இருந்தார். எடப்பாடி பழனிசாமி அல்லது ஓபிஎஸ் ஆகிய இருவர் மீதும் தனது பேட்டியின் போது அவர் வெறுப்பை காட்டவில்லை. பதவியை தனக்கு விட்டுத்தரவில்லை என்றோ கட்சிக்குள் தன்னை சேர்க்கவில்லை என்றோ எடப்பாடி பழனிசாமி மீது சசிகலாவுக்கு ஆதங்கம் இருந்தாலும்கூட இப்போதைய நிலையில் எடப்பாடிபழனிசாமிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு சசிகலா தயாராக இல்லை என்பதை அவரது பேட்டி உறுதி செய்கிறது.
நரேந்திர மோடி நண்பர்
சமீபத்தில் தொண்டர் ஒருவருடன் பேசும்போது, எடப்பாடிபழனிசாமியை சிறையில் தள்ள வேண்டும் என்று அவர் சொல்ல.. சசிகலா அப்படி எல்லாம் பேசக்கூடாது என்று கடிந்துகொண்டார். இதேபோல ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது, நரேந்திர மோடி ஜெயலலிதாவின் நண்பர் என்றார் சசிகலா. தனது தந்தை வாஜ்பாயின் வானொலி உரைகள் கேட்கும் வழக்கம் உள்ளவர் தானும் அவ்வாறு கேட்டு வளர்ந்தேன் என்றும் கூறினார். வாஜ்பாய் அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை ஜெயலலிதா வாபஸ் பெற்றதில் தனக்கு உடன்பாடு இல்லை, வாபஸ் பெறக் கூடாது என்றுதான் ஜெயலலிதாவிடம் வாதிட்டேன் என்றும் தெரிவித்தார்.
பேட்டியால் குளிர்வித்த சசிகலா
இதேபோல, காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட போது ஜெயலலிதாவின் காலில் விழுந்து அவ்வாறு கைது நடவடிக்கையை எடுக்க கூடாது என்று நான் கெஞ்சினேன் என்றும் சசிகலா தெரிவித்தார். இவை அனைத்துமே பிரதமர் மோடி அல்லது பாஜக தலைமையுடன் தனக்கு எந்த உரசலும் இல்லை என்பதற்கான சமிக்ஞைகளாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மூலம் முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை கையில் எடுக்க ஆரம்பித்துள்ளது திமுக அரசு. கொரோனா நோய் பரவல் காலகட்டத்தில், அதில் கவனம் செலுத்திய ஸ்டாலின் அரசு, முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தியதன் மூலம் அடுத்தடுத்து அதிரடி காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெருக்கடியில் மாஜி அமைச்சர்கள்
இந்த நேரத்தில் சசிகலா அதிமுகவில் இருப்பது திமுகவை யோசிக்க வைக்கும். அதிமுக முன்னணி தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பு குறைவு என்ற பேச்சு அதிமுக வட்டாரத்தில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இப்படியாக பலதரப்பட்ட கருத்துக்கள் வெளியாகி உள்ள நிலையில் பன்னீர்செல்வம் டெல்லி சென்றார். அவரை தொடர்ந்து நேற்று இரவு எடப்பாடி பழனிசாமியும் டெல்லி சென்றுள்ளார்.
சசிகலாவுக்கு பதவி
மோடியுடனான சந்திப்பின் போது சசிகலாவை மீண்டும் அதிமுகவிற்கு கொண்டுவரவேண்டும், அவருக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. பொதுச்செயலாளர் என்ற பதவி தான அதிமுகவில் உள்ளது. ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி கள் இல்லை என்பது சசிகலா வாதமாக இருந்து வருகிறது. ஏற்கனவே கட்சி தனக்கு சொந்தம் என்று அவர் தொடர்ந்த வழக்கு இன்னமும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. எனவே அவருக்கு பொதுச் செயலாளர் பதவி கொடுத்து ஓபிஎஸ்சுக்கு, மதுசூதனன் வசமிருக்கும் அவைத் தலைவர் பதவியை கொடுக்கலாமா, எடப்பாடி பழனிசாமிக்கு பொருளாளர் பதவி கொடுக்கலாமா அல்லது இப்போது உள்ள ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் அப்படியே தொடரலாமா என்பது பற்றி தீவிர ஆலோசனை நடக்கும் என்று தெரிகிறது. ஏனெனில் சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்கு ஓபிஎஸ் மட்டுமல்லாது எடப்பாடி பழனிசாமியும் கூட, தற்போது ஓரளவுக்கு தயார் மனநிலைக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது.