மோடிக்கு எதிராக பேசும் வைகோவுக்கு பதவி பிரமாணம் செய்ய கூடாது- சசிகலா புஷ்பா தடாலடி மனு
டெல்லி: பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவிடம் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா மனு அளித்துள்ளார்.
2009-ல் திமுக ஆட்சிக் காலத்தில் வைகோ மீது தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி, வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இதனால் வைகோ ராஜ்யசபா எம்.பி. ஆவதில் சிக்கல் ஏற்படும் என கூறப்பட்டது. ஆனால் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டதால் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வாகி உள்ளார். 23 ஆண்டுகளுக்குப் பின் வைகோ ராஜ்யசபாவுக்குள் நுழைகிறார்.
இந்நிலையில் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா, ராஜ்யசபா தலைவரான துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் ஒரு மனு அளித்துள்ளார். அதில் தேசதுரோக வழக்கில் தண்டனை பெற்ற வைகோவுக்கு ராஜ்யசபா எம்.பி.யாக பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பிரதமர் மோடியை தமிழர் விரோதியாக தொடர்ந்து சித்தரித்து வருகிறார் வைகோ என்றும் சசிகலா புஷ்பா அதில் குற்றம்சாட்டியுள்ளார்.