மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் சந்திப்பு.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
டெல்லி:டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் சந்தித்து பேசியிருப்பது மிக முக்கியமானதாக பார்க்கப் படுகிறது.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து... அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை தொடங்கினார். சசிகலா கைது... டிடிவி தினகரன் சிறைவாசம் ... இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது என பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறின.
ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைய... தனி இயக்கம் கண்ட டிடிவி தினகரன் ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏவானார். தினகரனின் நடவடிக்கைகளால், திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்ற பெயரில் தனிக்கட்சியை தொடங்கினார். அமமுகவில் இருந்து பலர் விலகி வருவதால் அக்கட்சி மூழ்கும் கப்பலாக உள்ளது என்று அவர் விமர்சித்திருந்தார்.
ஒரு கட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்ப்பார் என்றும் கூட பரவலாக பேசப்பட்டது. அவரது மகன் ஜெய் ஆனந்த் திவாகரன் சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் இயக்கம் ஒன்றை தொடங்குவதாகவும் அறிவித்திருந்தார்.
இந் நிலையில், டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை ஜெய் ஆனந்த் திவாகரன் சந்தித்து பேசியுள்ளார். தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலையில் இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாயந்ததாக கருதப்படுகிறது.
மத்திய அமைச்சராக பியூஷ் கோயல்தான்... லோக்சபா தேர்தலுக்கான தமிழக பாஜகவின் பொறுப்பாளராக உள்ளார். எதற்கான சந்திப்பு இது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும் முக்கியத் துவமாக கருதப்படுகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி உருவாகும் என்று அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கூறி வரும் நிலையில் அதில் பாஜகவும் நிச்சயமாக இணையும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், திவாகரன் மகன் சந்திப்பு.. அரசியலை ஒட்டியதாகவே இருக்கும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.