பாக். டூ ரியாத் டூ டெல்லி.. இந்தியாவின் எதிர்ப்பால் யூ டர்ன் போட்டு டெல்லி வரும் சவுதி இளவரசர்
Recommended Video
டெல்லி: சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான், இரு நாட்கள், அரசு முறைப் பயணமாக, இன்று டெல்லி வருகை தருகிறார்.
முகமது பின் சல்மான், பாகிஸ்தானில் இரு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், இஸ்லாமாபாத்திலிருந்து ரியாத் சென்று, அங்கிருந்து இன்று தனது அமைச்சர்களுடன் டெல்லி வருகை தருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் இளவரசர் முகமது பின் சல்மான், நாளை சந்தித்து இரு நாட்டு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்ச்சை கருத்து
முன்னதாக, பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபிய நாடுகள் இணைந்து நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில், இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சிறப்பாக முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பாராட்டு வழங்கப்பட்டிருந்தது. காஷ்மீரில் இந்திய சிஆர்பிஎப் படைவீரர்கள் 40 பேர் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலில் பலியான நிலையில் சவுதி இளவரசரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
யூ டர்ன்
காஷ்மீர் தாக்குதல் நடந்துள்ள நிலையில், பாகிஸ்தானிலிருந்து நேரடியாக இந்தியாவிற்கு விமானத்தில் இளவரசர் வருகை தர இந்தியா அதிருப்தி வெளிப்படுத்தியது. எனவே ரியாத் சென்ற முகமது பின் சல்மான், அங்கேயிருந்து டெல்லி வருகிறார். இந்தியா வரும் முகமது பின் சல்மானுடன், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் இரு நாடுகள் நடுவேயான வர்த்தக மேம்பாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒத்துழைப்பு
சவுதி அரேபியாவின் ஸ்டாட்டர்ஜிக் கூட்டாளி நாடுகள் மொத்தம் 8 ஆகும். அதில் இந்தியாவும் ஒன்று. இந்த நாடுகளுடன் உறவை பலப்படுத்துவது முகமது பின் சல்மான் வருகையின் நோக்கம் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இந்தியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளும் ஸ்டாட்டர்ஜிக் கூட்டுறவு கவுன்சில் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கடற்படை அளவில் ஒத்துழைப்பு அதிகரிக்கப்படும்.
ரியாத் சென்ற மோடி
2016ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ரியாத் சென்று வர்த்தகம், முதலீடு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கூட்டுறவை அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார் என்பது நினைவிருக்கலாம்.