தண்ணீர் தான் நம் உயிர் நாடி.. நீர்வளத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவோம்.. பிரதமர் அழைப்பு
டெல்லி: அரசியல்வாதிகளால் மட்டுமல்ல சாதாரண பொதுமக்களாலும் அவசர நிலை எதிர்க்கப்பட்டதாக கூறியுள்ள பிரதமர் மோடி, நம் கலாச்சாரத்தின் அம்சமே ஜனநாயகம் தான் என கூறியுள்ளார்.
தற்போது இரண்டாவது முறையாக பிரதமர் பொறுப்பேற்றுள்ள மோடி, கடந்த முறை போலவே இம்முறையும் மன் கி பாத் எனப்படும் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்ற துவங்கியுள்ளார்.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களிடையே உரையாற்றும் மோடி, நாட்டில் நடைபெறும் பல்வேறு சம்பவங்கள் குறித்து தனது கருத்தை பதிவு செய்து மக்களிடம் சேர்த்து வருகிறார். மன் கி பாத் எனப்படும் மனதோடு நான் நிகழ்ச்சி இதற்கு முன் கடைசியாக கடந்த பிப்ரவரி, 24ல் வானொலியில் ஒலிபரப்பானது.
நாகாலாந்துக்கு தனி பாஸ்போர்ட், தனி கொடி... ஒப்புக் கொண்டது மத்திய அரசு?
அதன் பின் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் ஒலிப்பரப்பான மன் கி பாத் 53-வது நிகழ்ச்சியாகும்
இதனிடையே இன்றைய மன் கி பாத் நிகழ்வில் பேசிய மோடி, ஜனநாயகத்தை காப்பாற்ற நாட்டு மக்கள் தொடர்ந்து 2-வது முறையாக பாஜகவுக்கு வாய்ப்பளித்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும் பேசிய பிரதமர், ஜனநாயக பாரம்பரியம் குறித்து இந்தியா பெருமை கொள்கிறது.
130 கோடி இந்தியர்களும் ஒருசேர வலிமையான இந்தியாவையே விரும்புகின்றனர். ஒரே ஒரு பெண் வாக்காளருக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டதே, நம் ஜனநாயக பெருமைக்கு சான்று என்றார். மேலும் எப்போதும் இல்லாத வகையில் மக்களவைக்கு அதிக எண்ணிக்கையில் பெண் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஜனநாயக கொள்கை என்பது நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஓர் அம்சமாகும். 2019 தேர்தலில் நாடு முழுவதும் சுமார் 61 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இந்த தேர்தலில் வாக்களித்த ஒவ்வொருவரையும் பாராட்டுகிறேன்.
மேலும் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் ஏராளமான பெண்கள் வாக்களித்தும் சாதனை படைத்துள்ளதாக குறிப்பிட்டார். தேர்தலில் மக்கள் பெருமளவில் பங்கேற்றது, ஜனநாயகத்தில் மக்களுக்கு உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
தண்ணீர் தான் நமது உயிர், எனவே நீர்வளத்தை பாதுகாப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார். தண்ணீரை சேமிப்பது குறித்து ஊராட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பல்வேறு வட்டாரங்களில் தண்ணீரை சேமிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி தாம் கேட்டறிந்து கொண்டதாக கூறினார். தண்ணீரை சேமித்தல் நாட்டை பாதுகாப்பதற்கு சமம் என்பதை, நினைவில் கொள்ளுங்கள் என மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
ஒரு துளி நீரை கூட வீணாக்காமல் இருக்க முயற்சிக்க வேண்டும், நீர் சேகரிப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் பொதுமக்களிடம் நீர் சேகரிப்பு மேலாண்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த கோரிக்கை வைக்கிறேன்.
தண்ணீரை சேமிப்பது தற்போது ஒரு இயக்கமாகவே மாறிவிட்டதாக குறிப்பிட்டார். நீரை சேமிக்க, நூற்றாண்டு காலமாக நாம் கடைபிடித்த பழங்கால முறையினை மீண்டும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்