குக்கூ.. இந்திய ரயில்வேயில் புதிய 'ஏஐ' ரோபோட் அறிமுகம்.. உஸ்தாதுக்கு ஒரு ஹாய் சொல்லுங்க!
இந்திய ரயில்வேயில் தற்போது உஸ்தாத் என்ற ரோபோட் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
டெல்லி: இந்திய ரயில்வேயில் தற்போது உஸ்தாத் என்ற ரோபோட் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
உலகம் முழுக்க தற்போது பல்வேறு துறைகளில் ரோபோட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக கார் உள்ளிட்ட வாகனங்கள் தயாரிப்பில் அதிக அளவில் ரோபோட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான் தற்போது இந்திய ரயில்வேயில் ரோபோட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு உஸ்தாத் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
என்ன மாதிரியான ரோபோட்
இந்த ரோபோட் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் செயல்படும் ரோபோட் ஆகும். உஸ்தாத் USTAAD -Undergear Surveillance Through Artificial Intelligence Assisted Droid என்று பொருள் ஆகும். உஸ்தாத் என்றால் ஹிந்தியில் பயில்வான் என்றும் பொருள்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இது ரயில் உற்பத்தியில் உதவவும், ரயிலில் ஏற்பட்டு இருக்கும் கோளாறுகளை கண்காணிக்கவும் உதவும்.
எப்படி செய்யும்
இந்த ரோபோட்டில் அனைத்து பக்கங்களிலும் எச்.டி கேமராக்கள் இருக்கும். இந்த கேமராக்கள் அனைத்து பக்கங்களிலும் சுழல கூடியது. இது ரயிலின் அடிப்பாகத்தில் சென்று அங்கு இருக்கும் கோளாறுகளை கண்டுபிடிக்க உதவும். ரயில் உட்பகுதிக்குள்ளும் இதன் மூலம் செல்ல முடியும். இது வைஃபை மூலம் அருகில் இருக்கும் சோதனை கூடத்தில் இணைக்கப்பட்டு இருக்கும்.
எளிதான சோதனை
சோதனை கூடத்தில் இருக்கும் அதிகாரிகள் இந்த வீடியோவை உடனுக்குடன் பார்த்து, கோளாறுகளை கண்டுபிடிப்பார்கள். இந்த கோளாறுகளை பின் நபர்கள் வைத்து இவர்கள் சரி செய்வார்கள். இந்த ரோபோட் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் மூலம் இயங்கும் என்பதால் எப்படி இயங்க வேண்டும் எப்படி தவறுகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று இதற்கே தெரியும். நாம் வீடியோவை பார்த்து கண்காணித்தால் மட்டும் போதும்.
எல்லா இடங்களிலும்
இதை தற்போது நாக்பூர் ரயில் உற்பத்தி மையத்தில் மட்டும் வைத்து சோதனை செய்து வருகிறார்கள். இதன் முழு வெற்றிக்கு பின் இந்தியா முழுக்க இது அறிமுகப்படுத்தப்படும். இந்திய ரயில்வே துறையில் ரோபோட் ஒன்று அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.