இவ்வளவு மட்டமாக யோசிக்கிறார்களே.. போலீசில் சிக்காமல் வெளியே சுற்ற கண்டுபிடிக்கும் காரணத்தை பாருங்க
டெல்லி: பல வகை மோசடி வழிமுறைகளை கையாண்டு சிலர், லாக்டவுன் நாட்களில் வெளியே சுற்றி திரிவது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்க நாட்டில் 21 நாள் லாக்டவுன் செயல்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 25 முதல் தொடங்கிய இந்த லாக்டவுன், ஏப்ரல் 14 வரை செயல்பாட்டில் இருக்கும்.
லாக்டவுனைக் கருத்தில் கொண்டு, நாடு முழுக்க, அத்தியாவசியம் தவிர்த்த, அனைத்து வகையான நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை.
காவல்துறை
மிக முக்கியமான வேலை இல்லாவிட்டால், எந்தவொரு நபரும் சாலையில் வர முடியாது, காவல்துறை இந்த விதியை கண்டிப்பாக பின்பற்றுகிறது.
இந்த நிலையில்தான், நமது பொறுப்பற்ற சிட்டிசன்கள் சிலர், மோசடி வித்தைகளை கையாண்டு, வெளியில் சுற்றி வருகிறார்கள். சிகிச்சையளிக்கும் அத்தியாவசிய சேவை மருத்துவ சேவை. மருத்துவர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தடையின்றி செல்ல முடியும். எனவே நொய்டா நகரில் ஒரு நபர் போலியாக மருத்துவர் வேடமிட்டு சுற்றியுள்ளார்.
டாக்டர் வேஷம்
அந்த வாலிபர் முகமூடியை அணிந்து, மருத்துவர்களின் வெள்ளை நிற உடையை வாங்கி அணிந்து நொய்டாவில் அச்சமின்றி அலைந்து திரிந்துள்ளார். அப்போது சில உஷார் போலீசாரின் பார்வையில் இவர் சிக்கினார். எங்கே போறீங்க என போலீசார் கேட்டபோது, முன்னுக்கு பின் முரணாக உளறியுள்ளார் அந்த வாலிபர்.
லாக்அப்
இதனால் போலீசார், பிடித்து, தர்ம அடி கொடுத்துள்ளனர். காவல்துறையினர் அந்த இளைஞனை காவலில் எடுத்து, வழக்கு பதிவு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இப்போது வீட்டுக்குள் இருக்க முடியாமல் உல்லாசமாக சுற்ற ஆசைப்பட்ட அந்த நபர், வீட்டில் கூட இருக்க முடியாமல் லாக்அப்பில் கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறார்.
இப்படி இறங்கிட்டாங்களே
காவல்துறையினரை ஏமாற்றுவதாக நினைத்து, சில மோசடி பேர்வழிகள் வெவ்வேறு வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். ஜம்மு-காஷ்மீரில், நான்கு பேர் கொண்ட ஒரு குழு, ஒரு மோசமான தந்திரத்தை கையில் எடுத்துள்ளது. அவர்களில் ஒருவர் இறந்துவிட்டதாக நடித்து ஆம்புலன்சில் படுத்து கிடந்துள்ளார். பிற மூன்று தோழர்கள் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் போலீஸ் விசாரணையின் போது, இந்த நான்கு பேரும் பிடிபட்டுள்ளனர்.
நாட்டு நிலவரம்
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பார்கள், அதேபோல, மக்களாக திருந்தாவிட்டால், கொரோனாவை ஒழிக்க முடியாது என்பதை இதுபோன்ற நபர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுக்க கொரோனாவால் 1750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில், நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் அரசுக்கு முக்கியத்துவமாகும்.