ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு.. ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
டெல்லி: ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரும் வழக்கு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். ஆட்சி அமைப்பதற்காக அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். ஆனால் அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் தற்போதைய துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உட்பட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
அவர்கள் எல்லோரும் அப்போதைய கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தனர். ஆனால் அவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சபாநாயகர் இவர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யவில்லை.
ஆனால் ஆளுநரிடம் முதல்வருக்கு எதிராக கடிதம் கொடுத்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், 11 பேரை தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்ற தீர்ப்பில், சபாநாயகரின் தீர்ப்பில் தலையிட முடியாது என்று கூறினார்.
இதற்கு எதிராக டிடிவி தினகரனும், திமுகவினரும் உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுத்தனர். அதன்படி தகுதி நீக்க வழக்கில் பதில் அளிக்கும்படி தமிழக சட்டசபை சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அதேபோல் இந்த வழக்கில் 11 எம்எல்ஏக்கள், சட்டசபை செயலாளர், கொறடா எல்லோரும் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விசாரணையை பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தனர். இதையடுத்து 2 மணிக்கு நடைபெற்ற விசாரணையின்போது ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.