ஸ்டெர்லைட்: தீர்ப்பாய உத்தரவுக்கு தடை இல்லை.. ஹைகோர்ட் உத்தரவுக்கு தடை - சுப்ரீம் கோர்ட்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Recommended Video
டெல்லி: துப்பாக்கி சூட்டினை நடத்தி 13 உயிர்களை காவு வாங்கியதற்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை பிறப்பித்த உத்தரவையும் சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இதை ரத்து செய்யக்கோரி வேதாந்தா நிறுவனத்தின் சார்பாக தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவை வரும் 8ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து பாத்திமா பாபு தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனால் தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் வேதாந்தா நிறுவன குழும இயக்குநர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியதுடன், வழக்கை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதுவரை ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவித்தது.
ஆனால் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு எதிராக வேதாந்தா நிறுவனத்தின் சார்பாக கடந்த மாதம் 24ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர விசாரித்த பின்னர்தான் ஆலையை மீண்டும் திறக்கலாம் என தீர்ப்பு வழங்கியது.
இதற்கிடையே, உயர் நீதிமன்றம் ஜனவரி 21ம் தேதி வரை ஆலையை திறக்க தடை விதித்துள்ளது. இதில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது. உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு. அதனால், இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் சுப்ரீம்கோர்ட்டில் ஒரு புதிய கோரிக்கையை முன்வைத்தார். தனது கோரிக்கையில்,"ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக மதுரை ஐகோர்ட் வழங்கிய உத்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, இந்த வழக்கு 8-ம் தேதி அதாவது இன்று நடைபெறும் என சொல்லப்பட்டிருந்தது. இதனால் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவும், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் மனுவும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பான தீர்ப்பினை சுப்ரீம் கோர்ட் வழங்கி உள்ளது. அதன்படி,தற்போதைய நிலையே தொடரலாம் என்று மதுரை உயர்நீதிமன்க் கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.
இரு தரப்பும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி பார்த்தால் ஸ்டெர்லைட் ஆலை இயங்கலாம் என்றே சுப்ரீம் கோர்ட் கூறியிருப்பதாக சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொள்ள, அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி "ஸ்டெர்லைட் ஆலையை யார் நினைத்தாலும் திறக்க இயலாது" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.