லவ் ஜிகாத் வழக்கு.. சூடு பிடிக்கும் விசாரணை.. ஹிமாச்சல், ம.பி.,யை மனுதாரர்களாக சேர்க்க அனுமதி
டெல்லி: லவ் ஜிகாத் வழக்கில், இமாச்சலப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது
காதல் என்ற பெயரில் இந்து பெண்கள் கட்டாய மதமாற்றத்திற்கு உள்ளாக்கப்படுவதாகவும், இதைத் தடுக்க விரைவில் ஒரு சட்டம் இயற்றப்படும் என்று உத்தரப் பிரதேச அரசு அறிவித்திருந்தது. அதன்படி லவ் ஜிகாத் என்ற சட்டத்தைக் கடந்தாண்டு அறிமுகப்படுத்தியது.
இதேபோல ஹிமச்சால பிரதேசம், உத்தரகண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம் என பாஜக ஆளும் பல மாநிலங்களிலும் இதுபோன்ற சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
தன்னார்வ தொண்டு நிறுவனம்
இந்நிலையில் இந்தச் சட்டங்கள் ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தையும், மதத்தைப் பின்பற்றுவதற்கான சுதந்திரத்தையும் பறிக்கும்படி இருப்பதாகக் கூறி இரண்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் வழக்கறிஞர் விஷால் தக்ரே மற்றும் 'Citizen for Justice and Peace' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் தாக்கல் செய்யப்பட்டது.
அனுமதி
இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
துன்புறுத்தல்
மேலும், தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச், நாடு முழுவதும் இந்த 'லவ் ஜிஹாத்' சட்டங்களின் கீழ் ஏராளமான முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற அடிப்படையில், ஜமியத் உலமா-ஐ-ஹிந்த் எனும் முஸ்லிம் அமைப்பையும் மனுதாரராக சேர்க்க அனுமதி அளித்துள்ளது.
செல்லுபடியாகுமா?
முன்னதாக, கடந்த ஜனவரி 6ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, மாநில அரசுகளின் பதில்களைக் கேட்காமல் சட்டங்களுக்குத் தடை விதிப்பது சரியாக இருக்காது என்று கூறி தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இருப்பினும், லவ் ஜிகாத்திற்கு எதிரான இந்த சட்டங்கள் அரசியலமைப்பிற்கு உட்பட்டவையா என்பது குறித்தும் அவை செல்லுபடியாகுமா என்பது குறித்தும் விசாரணை செய்ய நீதிமன்றம் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.