சென்னையிலிருந்து காஷ்மீர் செல்லும் மெகபூபா முப்தி மகள்.. உச்ச நீதிமன்றம் அனுமதி.. தாயை சந்திக்கிறார்
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியை அவரது மகள் இல்டிஜா முப்தி காஷ்மீர் சென்று நேரில் சந்திக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டெல்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியை அவரது மகள் இல்டிஜா முப்தி காஷ்மீர் சென்று நேரில் சந்திக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ நீக்குவதாக மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியாகும் முன் காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. முக்கியமாக அங்கு அரசியல் தலைவர்கள் பலர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர்.
முன்னாள் காஷ்மீர் முதல்வர்கள் மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா ஆகியோர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 140 அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள் இப்படி வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தன்னுடைய தாய் மெகபூபா முப்தியை பார்க்க வேண்டும் என்று அவரின் மகள் இல்டிஜா முப்தி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். என் தாய் ஆகஸ்ட் 5ம் தேதியில் இருந்து வீட்டு சிறையில் இருக்கிறார். அவரை வீட்டு சிறையில் வைத்து இருப்பதற்கான சரியான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.
வருகிறது அணு எரிபொருள்.. ரஷ்யாவில் கூடங்குளம் பற்றி ஆலோசனை.. இனி என்னவெல்லாம் நடக்கும்?
அவரை உடனே நான் சந்திக்க வேண்டும். அவரின் உடல்நிலை குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவரின் மனு மீதான விசாரணை இன்று நடந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ் ஏ போட்பே, எஸ் ஏ நசீர் ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில், இல்டிஜா முப்தி சார்பில் முக்கியமான வாதம் வைக்கப்பட்டது. என் தாயை பார்த்து ஒரு மாதம் ஆகிறது. அவரின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. கடந்த வாரம் சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, அவரின் கட்சி உறுப்பினர் முகமது யோசோப் திரிகாமியை சந்திக்க அனுமதிக்கப்பட்டார்.
அதேபோல் என்னையும் அனுமதிக்க வேண்டும். அதேபோல் நான் வீட்டிற்கு சென்றால் என்னையும் வீட்டு காவலில் வைக்க அரசு முயற்சி செய்யும். அதையும் தடுக்க வேண்டும் என்று இல்டிஜா முப்தி சார்பில் வாதம் செய்யப்பட்டது .
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இல்டிஜா முப்தி காஷ்மீர் சென்று தனது தாய் மெகபூபா முப்தியை சந்திக்கலாம் என்று அனுமதி அளித்துள்ளனர். இல்டிஜா முப்தி தற்போது சென்னையில் இருக்கிறார். நாளை பெரும்பாலும் இல்டிஜா முப்தி காஷ்மீர் சென்று மெகபூபா முப்தியை சந்திக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.