விவசாயிகள் போராட்டம்... அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? நாளை கூடும் வல்லுநர் குழு
டெல்லி: விவசாய சட்டங்கள் தொடர்பாக டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள வல்லுநர் குழு, முதன்முதலாக நாளை கூடி ஆலோசிக்க உள்ளது.
மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த 50 நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணையில் இந்த விவசாய சட்டங்களுக்கு தற்காலிகமாகத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும், இது தொடர்பான முடிவுகளை எடுக்க நான்கு பேர் கொண்ட குழுவையும் அமைத்து உத்தரவிட்டது.
இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த பாரதிய கிசான் யூனியன் தலைவர் பூபிந்தர் சிங் மான், கடந்த வாரம் இக்குழுவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். விவசாயிகள் போராட்டத்தைக் கலைப்பதற்காகவே உச்ச நீதிமன்றம் இந்த தீர்பை அளித்துள்ளதாக பல்வேறு விவசாயிகளும் விமர்சித்துள்ளனர்.
பூபிந்தர் சிங் மானை தவிர இந்தக் குழுவில் அனில் கன்வாட், வேளாண் பொருளாதார வல்லுநர்களான அசோக் குலாட்டி மற்றும் பிரமோத் குமார் ஜோஷி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு பூசா வளாகத்தில் நாளை முதல் முறையாகச் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளது. இத்தகவலை அனில் கன்வாட், உறுதி செய்துள்ளார். குடியரசு தினத்தில் தலைநகரில் டிராக்டர் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தக் குழுவில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து அனில் கன்வாட் கூறுகையில், "உச்ச நீதிமன்றம் அமைத்த நான்கு பேர் குழுவில் இருந்து ஒருவர் விலகிவிட்டார். மற்றொரு நபரை உச்ச நீதிமன்றம் நியமிக்கவில்லை என்றால் மூன்று பேருடன் நாங்கள் எங்கள் பணிகளைத் தொடங்குவோம். இது குறித்த விதிமுறைகளைப் பெற்றுள்ளோம். வரும் ஜனவரி 21ஆம் தேதி முதல் பணிகளைத் தொடங்கவுள்ளோம்" என்றார்.