ராணுவத்தை போல கடற்படையிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: ராணுவத்தை போல் கடற்படையிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் அஜெய் ராஸ்டோகி ஆகியோர் பிறப்பித்தனர்.
ராணுவம் மற்றும் விமான படையை போன்று கடற்படையில் பெண்களுக்கும் நிரந்தர கட்டளை பணி (Permanent Commission) வழங்கப்படுவதில்லை என்பது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் பெண் கடற்படை அதிகாரிகள் கடந்த 2015-ஆம் ஆண்டு தொடர்ந்தனர்.
அதில் ராணுவம், விமான படையில் பெண்களுக்கு நிரந்தர கட்டளை பணிகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் எங்களுக்கு அது போன்ற ஒன்று இல்லாததால் நாங்கள் முன் கூட்டியே பதவி ஓய்வு பெற நேரிடுகிறது. இல்லாவிட்டால் கட்டாயமாக எங்களுடைய பணிக்காலம் முடித்து வைக்கப்படுகிறது. இதன் மூலம் நாங்கள் உயர் பதவிகளையும் வருமானத்தையும் இழக்கிறோம்.
ஆனால் நிரந்தர கட்டளை பணி மூலம் ஒரு பதவிக்கு வரையறுக்கப்பட்டுள்ள முழு காலத்திற்கும் அப்பணியில் இருக்கும் பெண் அதிகாரிகள் பதவி உயர்வு பெற தகுதி பெறுகின்றனர். குறுகிய கால பணியால் நாங்கள் பணி வாய்ப்புகளை இழப்பதுடன் ஓய்வூதியம் உள்ளிட்டவற்றையும் இழந்து வருகிறோம். எனவே எங்களுக்கும் நிரந்தர கட்டளை பணி கொடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி 2015-ஆம் ஆண்டு கடற்படையில் உள்ள பெண்களுக்கும் நிரந்தர கட்டளை பணி வழங்க உத்தரவிட்டனர். இதன் மூலம் பெண்கள் தங்கள் ஓய்வு வயது வரை கடற்படையில் பணிபுரியலாம் என்பதுதான்.
டெல்லி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் அஜெய் ராஸ்டோகி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ராணுவத்தில் களத்தில் இறங்கி சண்டையிடாத பணிகளில் பெண்களுக்கு நிரந்தர பணி தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது போல் கடற்படையிலும் வழங்க வேண்டும்.
நிரந்தர பணிகளில் ஆண், பெண் என பிரித்து பார்க்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது, ஆண் அதிகாரிகளை போல் பெண்களாலும் சிறப்பாக செயல்பட முடியும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. காலியிடங்களின் அடிப்படையில் இன்னும் 3 மாதத்திற்குள் பெண்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ராணுவத்தில் பணி நியமனத்தின்போது ஆண், பெண் பாகுபாடு பார்க்கப்படுவதாக மூத்த வழக்கறிஞர்கள் மீனாட்சி லேகி, ஐஸ்வர்யா பட்டி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கும் கமாண்டிங் பொறுப்புகள் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.