அதென்ன அர்னாப் கோஸ்வாமிக்கு மட்டும் "ஸ்பெஷல்" சலுகை.. கடுப்பான சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷன்!
அர்னாப் மனு மீது மட்டும் என்ன சலுகை என பார் அசோசியேஷன் கேள்வி எழுப்பி உள்ளது
டெல்லி: "எத்தனையோ சாமான்ய மக்கள் ஜெயிலில் இருக்கும்போது, அர்னாப் கோஸ்வாமிக்கு மட்டும் ஏன் இந்த ஸ்பெஷல் சலுகை? அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை மட்டும், ஒரே நாளில் விசாரிக்க எடுத்து கொள்வது ஏன்?" என்று சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷன் நறுக்கென கேள்வி எழுப்பி உள்ளது!
ரிபப்ளிக் டிவியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது தற்கொலைக்கு தூண்டியதாக கிளம்பியுள்ள புகாரின் அடிப்படையில் அவர் சமீபத்தில் கைதானார்.. அவரது கைதுக்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
அவருக்கு 4 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.. ஆனால், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மும்பை ஹைகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.. எனவே இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அர்னாப் கோஸ்வாமி வழக்கு தொடர்ந்துள்ளார்... அந்த மனு, இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.
விசாரணை
அர்னாப் கோஸ்வாமியின் மனுவை உடனடியாக கோர்ட் விசாரிக்குமா? இந்த மாதிரி சாமான்ய மனிதரின் மனுவையும் கோர்ட் உடனே விசாரிக்குமா என்ற கேள்வியைதான் பலரும் எழுப்பி வருகின்றனர். ஆனால் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்ற அறிவிப்பு உடனடியாக வெளியானது.
லெட்டர்
இந்த அறிவிப்புக்கு சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக, அதன் தலைவரும், சீனியர் வக்கீலுமான துஷ்யந்த் தவே, சுப்ரீம் கோர்ட் நிர்வாக தலைவருக்கு ஒரு லெட்டர் எழுதி உள்ளார்.. அதில் அவர் சொல்லி உள்ளதாவது:
லிஸ்ட்
"இந்த கொரோனா தொற்று காலத்தில் 8 மாசமாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பல மனுக்கள், வார கணக்கில், மாசக் கணக்கில் இன்னும் லிஸ்ட் போடாமல் உள்ளன.. அந்த வழக்குகள் எல்லாம் பட்டியலிடப்படாத நிலையில், ஒவ்வொரு முறையும் அர்னாப் கோஸ்வாமி தாக்கல் செய்யும் மனு மீது மட்டும் எப்படி உடனே பட்டியலிடப்படுகிறது?
அர்னாப்
இதுபோன்ற அசாதாரணமான அவசர விஷயங்களின் பட்டியல்கள் தலைமை நீதிபதியின் குறிப்பிட்ட உத்தரவுகள் இல்லாமல் நடக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.. அதனால், இந்திய தலைமை நீதிபதியிடம் இருந்தோ, நிர்வாக தலைவராகிய நீங்களோ அல்லது பதிவாளரிடம் இருந்தோ அர்னாப் கோஸ்வாமிக்கு முன்னுரிமை ஏதாவது கொடுக்கப்பட்டுள்ளதா?
முக்கியத்துவம்
சில வழக்குகளை அவசரமாக பட்டியலிட நீங்கள் எனக்கு உதவி செய்திருக்கிறீர்கள்.. அது இப்போ பிரச்சனை இல்லை.. ஆனால், வழக்கு பட்டியல் தொடர்பான விஷயங்கள் கணினிமயமாக்கப்பட்டதாக சொல்லப்படும்போது இது மாதிரி தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் மட்டும் எப்படி நடக்கிறது?
எத்தனையோ சாமான்ய மக்கள் ஜெயிலில் இருக்கும்போது, அர்னாப் கோஸ்வாமிக்கு மட்டும் ஏன் இந்த ஸ்பெஷல் சலுகை?
வேதனை
முன்னாள் அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு கூட அவசரமாக பட்டியலிடப்படவில்லையே.. அது தாமதிக்கப்பட்டது.. ஆனால், தாக்கல் செய்த அர்னாப் கோஸ்வாமியின் மனுவை ஒரே நாளில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது வேதனை தருகிறது.. இந்த கடிதத்தை விசாரணையின்போது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.