கர்நாடகா எம்.எல்.ஏக்கள் ராஜினாமா- சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- தலைமை நீதிபதி கோகய்
டெல்லி: அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமா விவகாரத்தில் கர்நாடகா சட்டசபை சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் ஜேடிஎஸ்- காங்கிரஸ் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருகட்சிகளின் 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். இந்த ராஜினாமா கடிதங்கள் குறித்து சபாநாயகர் எந்த முடிவம் இதுவரை எடுக்கவில்லை.
அதேநேரத்தில் இந்த 16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யவும் சபாநாயகர் ரமேஷ் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. மேலும் வரும் 18-ந் தேதி முதல்வர் குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளது.
இந்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா தொடர்பான வழக்கு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ஆட்சியை தக்க வைக்கவே தகுதி நீக்கம் எனும் நடவடிக்கையை சபாநாயகர் மேற்கொள்கிறார்.
ஒரு கட்சியை பிடிக்கவில்லை என்பதற்காகத்தான் ராஜினாமா செய்கின்றனர். அப்படி பிடிக்காத ஒரு கட்சியின் கொறடா உத்தரவை ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்பது எப்படி சரியாகும்? என வாதிட்டார்.
இதையடுத்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி கோகய், எம்.எல்.ஏக்கள் ராஜினாமா குறித்து முடிவு எடுக்க வேண்டும் என சபாநாயகருக்கு தங்களால் உத்தரவிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இது ஜேடிஎஸ்- காங்கிரஸ் அரசுக்கு சாதகமானதாகும். ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களை ஜேடிஎஸ்- காங்கிரஸ் தங்கள் வழிக்கு கொண்டுவர தலைமை நீதிபதியின் இந்த கருத்து உதவக் கூடும்.