இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை தர கூடாது என கட்சிகளுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
டெல்லி: இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை தரக் கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கருத்து தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது நாட்டின் நிதி ஆரோக்கியத்தைப் பாதிக்கச் செய்கிறது; இலவசங்களை ஒழுங்குபடுத்த வேண்டும்; இதனை மீறும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் வழக்கு தொடர்ந்தார். இதற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பலரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இவ்வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வருகிறது. இவ்வழக்கில், இலவசங்கள் வேறு; மக்கள் நலத் திட்டங்கள் வேறு; இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது ஜனநாயகத்துக்கு எதிரான என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இது தொடர்பாக தேவைப்பட்டால் வல்லுநர் குழுவை அமைக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் நேற்று திமுக சார்பில் ஒரு இடையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், அரசியல் சாசனத்தின் 38-வது பிரிவின் கீழ் சமூக ஒழுங்கு, பொருளாதார நீதியைப் பாதுகாக்க இலவச சேவைகளை அளிக்கும் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மாநில அரசுகள் அறிமுகப்படுத்துகிற திட்டங்களை மட்டும் இலவசங்கள் என பார்க்கவும் முடியாது. அரசியல் கட்சிகளையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்க வேண்டும் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
”இலவசங்கள் அல்ல.. சமூகநீதி திட்டங்கள்” பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!
இன்று இம்மனு மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் போது, இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை தர கூடாது என அரசியல் கட்சிகளு9க்கு தடை விதிக்க முடியாது. மக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்துவது ஒரு அரசின் கடமை. பொது நிதியை எப்படி செல்வது செய்வது என்பதுதான் இங்கே விவாதத்துக்குரிய பிரச்சனையாக உள்ளது. இந்த விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது தொடர்பான கேள்வியும் உள்ளது என்றார் தலைமை நீதிபதி என்.வி.ரமணா.
இன்றைய விசாரணையின் போது திமுகவின் வில்சன், நாங்கள் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறோம். இந்தியா ஒரு மக்கள் நலன் அரசை கொண்டது. இங்கு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இது தொடர்பாக கமிட்டி அல்லது குழு அமைப்பதை எதிர்க்கிறோம் என்றார்.