13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்!
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பணி ஓய்வு பெற்ற நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பானுமதி கொலீஜியம் குழுவில் இடம்பெற்றுள்ளார். 13 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பெண் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொலீஜியம் என்ற குழுவின் பரிந்துரையின் பேரில்தான் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்கும். அந்த வகையில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் இன்றுடன் பணி ஓய்வு பெற்றுவிட்டார்.
இதனால் கொலீஜியம் குழுவில் ஒரு இடம் காலியானது. இதையடுத்து அப்பதவிக்கு தமிழகத்தைச் சேர்ந்த பெண் நீதிபதியான பானுமதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் 13 ஆண்டுகளுக்கு பிறகு கொலீஜியம் குழுவில் ஒரு பெண் உறுப்பினர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இனி இந்த குழுவில் தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே, என். வி. ரமணா, அருண் மிஸ்ரா, ரோகிண்டன் பாலி நாரிமன், ஆர் பானுமதி ஆகியோர் 5 பேர் இருப்பர்.
தமிழகத்தைச் சேர்ந்த பானுமதி கடந்த 2014-இல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டார். இவர் மாவட்ட மற்றும் குற்றவியல் நீதிபதியாக தனது பணியை தொடங்கினார்.
ஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை
அதன்பின்னர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தார். பின்னர் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த போது தான் சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதியாக கொலீஜிம் குழு பரிந்துரை செய்து நியமிக்கப்பட்டார்.
தற்போது கொலீஜியம் குழுவில் இடம் பெற்றுள்ள பானுமதியின் பதவிக்காலம் 9 மாதங்கள் மட்டுமே. இவர் அடுத்த ஆண்டு ஜூலை 19-இல் ஓய்வு பெறுகிறார். சுப்ரீம் கோர்ட்டில் மொத்தமுள்ள 34 நீதிபதிகளில் 3 பேர் மட்டுமே பெண்கள். அவர்களில் இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி, பானுமதி ஆகியோராவர்.
இதுவரை சுப்ரீம் கோர்ட்டில் 8 பெண்கள் மட்டுமே நீதிபதிகளாக இருந்துள்ளனர். நீண்ட நாள் பணியாற்றிய நீதிபதி ரூமா பால் ஆவார். நீதிபதிகள் பாத்திமா பீவி, சுஜாதா மனோகர், கியான் சுதா மிஸ்ரா, ரஞ்சனா தேசாய் ஆகியோர் 5 ஆண்டுகளுக்கும் குறைவாகவே நீதிபதியாக பணியாற்றியுள்ளனர். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இது வரை ஒரு பெண் இருந்ததே இல்லை.