இன்னுமா லோக் ஆயுக்தா அமைக்கலை.. தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு.. 3 மாதம் கெடு!
டெல்லி : 3 மாதங்களில் தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. லோக் ஆயுக்தா அமைக்க தமிழக அரசு காலதாமதம் செய்வது ஏன் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அரசுத்துறைகளில் நடக்கும் ஊழல்களை விசாரிப்பதற்காக லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்கள் கடந்த 2013ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. நாடு முழுவதும் இந்த அமைப்புகளை உருவாக்க உத்தரவிடப்பட்ட நிலையில் 15 மாநிலங்களில் இவை செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் லோக் ஆயுக்தா இன்னும் அமைக்கப்படாமல் காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது. மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு லோ ஆயுக்தா மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தாலும் இந்த அமைப்பின் தலைவர் யார் என்ற விவரங்களை அரசு முறைப்படி நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து தமிழக அரசுக்கு லோக் ஆயுக்தா அமைக்கும் எண்ணம் இருக்கிறதா இல்லையா என்று உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியது.
பிற்பகலில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது 3 மாதத்திற்குள் தமிழக அரசு லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. தமிழக அரசும் பிப்ரவரி முதல் வாரத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும் என்று உச்ச
நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.