அத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு சதி வழக்கு- 9 மாதத்தில் முடிக்க சுப்ரீம்கோர்ட் கெடு
டெல்லி: அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீதான பாபர் மசூதி இடிப்பு சதி வழக்கை 9 மாதத்தில் விசாரித்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி அயோத்தியில் பாபர் மசூதியை இந்துத்துவா கும்பல் இடித்து தரைமட்டமாக்கியது. இதனால் நாடு முழுவதும் பெரும் வன்முறை வெடித்ததில் 2,000 பேர் பலியாகினர்.
இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என 2017-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் வழக்கை விசாரித்து முடிக்க மேலும் 6 மாத கால அவகாசம் கேட்டது லக்னோ சிறப்பு நீதிமன்றம்.
இதனை ஏற்ற உச்சநீதிமன்றம், 9 மாதத்துக்குள் வழக்கை விசாரித்து முடித்து தீர்ப்பளிக்க வேண்டும் என இன்று உத்தரவிட்டுள்ளது.