முத்தலாக் அவசர சட்டத்தில் தலையிட முடியாது... வழக்குகளை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்!
டெல்லி : மத்திய அரசு கொண்டு வந்த முத்தலாக் அவசர சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்துவிட்டது.
இஸ்லாமிய வழக்கத்தில் கணவன் மனைவிக்கு 3 முறை தலாக் என வாய்மொழியாக கூறினாலே உடனடியாக அது விவகாரத்து பெற்றதற்கு சமமாக கருதப்படும். பெண்களுக்கு அநீதியான இந்த வழக்கத்தை தண்டனைக்குரிய சட்டமாக மாற்றி அண்மையில் மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. இந்த சட்டத்தின் படி குற்றம்சாட்டுக்கு ஆளானவர் ஜாமினில் வெளிவரமுடியாது.
காவல்நிலையத்தில் போலீசாரிடம் இருந்தே ஜாமின் பெறும் நடைமுறையும் இவர்களுக்குப் பொருந்தாது தேவைப்பட்டால் வழக்கு விசாரணைக்கு முன்னர் மாஜிஸ்திரேட்டிடம் முறையிட்டு ஜாமின் பெற்றுக்கொள்ளலாம். இதே போன்று குழந்தைகள் மைனர்கயாக இருந்தால் வழக்கு விசாரணை முடியும் வரை மாஜிஸ்திரேட்டு அனுமதியுடன் குழந்தைகளை மனைவி பராமரிக்கலாம் என்றும் சட்டம் சொல்கிறது.
இந்த அவசர சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மும்பை உயர்நீதிமன்றங்களில் கடந்த மாதம் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. முத்தலாக் சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது ஆனால் அது முன்னொழியப்பட்ட அம்சங்களை உள்ளடக்கியதாக இல்லை என்று மனுதாரர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.
எனினும் உச்சநீதிமன்றம் முத்தலாக் தண்டனைக்குரியது என்று மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இந்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி தள்ளுபடி செய்துள்ளார்.