14 வருஷம் ஜெயில், 24 மாசம் இருந்தது பெரிய விஷயமில்லை, லாலு ஜாமின் மனு தள்ளுபடி
Recommended Video
டெல்லி: ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ்வின் ஜாமின் மனுவினை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் 4 கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் 14 வருடம் சிறை தண்டனை பெற்றார்.
இதன்காரணமாக லாலு பிரசாத் யாதவ், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பாஜக கூறும் நதிகள் இணைப்பு சாத்தியமில்லை.. கே.எஸ். அழகிரி கருத்து
உச்சநீதிமன்றத்தில் மனு
அவர் உடல்நலக்குறைவு காரணமாக சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தன்னை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஜாமினுக்கு எதிர்ப்பு
இந்நிலையில் லாலுவுக்கு ஜாமின் தர சிபிஐ எதிர்ப்பு தெரிவித்தது. சிபிஐ தாக்கல் செய்த மனுவில், சிறையில் இருக்க முடியாது என மருத்துவமனை சென்ற லாலு, தற்போது உடல் நலம் சீரடைந்த பிறகு ஜாமின் கேட்பது வியப்பாக இருக்கிறது.
தேர்தல் நடக்கிறது
லாலு மருத்துவமனையில் இருந்த 8 மாத காலத்தில் அரசியலில் தான் ஈடுபட்டார். அவரை பார்க்க வந்த பார்வையாளர்களின் பட்டியலே இதற்கு முழு சாட்சி. மேலும் தற்போது தேர்தல் நடக்க உள்ளதால், ஜாமின் கிடைத்தால், அவர் அரசியலிலே ஈடுபடுவார். எனவே லாலு பிரசாத் யாதவ்க்கு ஜாமின் கொடுக்கக்கூடாது என சிபிஐ வாதிட்டது.
லாலு கைதில் சதி
இந்நிலையில் ஜாமின் வேண்டி லாலு பிரசாத் யாதவ் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், லாலு விவகாரத்தில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. எந்த தேவையும் எழவில்லை. ஆனால் அவர் கைது செய்யப்பட்ட விஷயத்தில் மிகப்பெரிய சதி இருந்தது என தெரிவித்தார்.
ஜாமின் தள்ளுபடி
அதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு , இந்த வழக்கின் தன்மைகள் குறித்து நீதிமன்றம் தான் முடிவு செய்யும். இப்போது பேச வேண்டியது ஜாமின் மனுவை பற்றி மட்டும் தான் என்று தெரிவித்தது. இதனிடைய லாலு பிரசாத் யாதவ் தரப்பில் 24 மாதங்கள் சிறையில் இருந்ததாக வாதிடப்பட்டது. இதனை ஏற்காத உச்சநீதிமன்றம் 14 ஆண்டுகளில் வெறும் 24 மாதங்கள் மட்டும் சிறையில் இருந்தது பெரிய விஷயம் இல்லை என்று கூறி லாலுவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.