ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிக்கே இரட்டை இலை சின்னம்- தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய சசிகலாவின் மனு தள்ளுபடி
டெல்லி: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிக்கு ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அதிமுகவில் பிளவுகள் ஏற்பட்டன. இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு என சிக்கல் எழுந்தது. இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
பின்னர் 2017-ல் ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்கே இரட்டை இலை சின்னம் என தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன், சசிகலா மனுத் தாக்கல் செய்தனர்.
இம்மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தினகரன் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இதையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பின்னர் திடீரென அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தினகரன் தொடங்கினார். அப்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சசிகலா தரப்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை இன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.