ஸ்ஸப்பா.. உங்களுக்கு என்னதான் வேண்டும்?.. காஷ்மீர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை நீக்கியதற்கு எதிராக வழக்கறிஞர் எம்எல் சர்மா தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளது.
Recommended Video
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை நீக்கியதற்கு எதிராக வழக்கறிஞர் எம்எல் சர்மா தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளது. மனுதாரர் எம்எல் சர்மாவிற்கு உச்ச நீதிமன்றம் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளது.
காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அது மட்டுமில்லாமல் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது.
இதற்கு எதிராக 5 பேர் வழக்கு தொடுத்து இருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தை நீக்கியது தவறு, அங்கு இணையம் போன் தொலைத்தொடர்பு இணைப்பை துண்டித்தது தவறு என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
யார் முக்கியம்
இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் விசாரணை நடந்தது. இதில் வழக்கறிஞர் எம். எல். சர்மா, காஷ்மீரை சேர்ந்த செய்தியாளர் அனுராதா பாஸின் ஆகியோரின் மனுக்கள் மீதான விசாரணை முக்கியத்துவம் பெற்றது.தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்ஏ நசீர் மற்றும் எஸ்ஏ போட்பே ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது.
என்ன கேள்வி
இதில் மனுதாரர்களிடம் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது. முக்கியமாக மனுதாரர்களில் ஒருவரான வழக்கறிஞர் எம்எல் சர்மாவிடம் தலைமை நீதிபதி சரமாரி கேள்விகளை எழுப்பினார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், உங்களுக்கு என்ன வேண்டும்? கோரிக்கை என்ன?. உங்கள் வழக்கின் கோரிக்கை என்ன?.காஷ்மீரில் அரசு என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்கள்.
என்ன தேவை
காஷ்மீர் 370 சட்ட நீக்கத்தால் நிவாரணம் வேண்டுமா?. அரை மணி நேரம் உங்கள் மனுவை படித்தும் கூட புரியவில்லை. நீங்கள் மனுவை தவறாக எழுதி இருக்கிறீர்கள். ஏற்கனவே இதேபோல் முக்கிய வழக்குகளில் நீங்கள் இப்படி மனுக்களை தாக்கல் செய்துள்ளீர்கள், என்று வழக்கறிஞர் எம்எல் சர்மா மனுவிற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பல்வேறு
மேலும், உங்கள் மனுவில் உள்ள அனைத்து பிழைகளையும் சரி செய்து மீண்டும் தாக்கல் செய்க. உங்கள் மனுவை நாங்கள் நினைத்தால் தள்ளுபடி செய்ய முடியும். ஆனால் உங்களால் மற்ற நான்கு மனுதாரர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் செய்யவில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
யார் இவர்
வழக்கறிஞர் எம்எல் சர்மா சர்ச்சைக்குரிய வழக்குகளை பதிவதில் பிரபலமானவர். இவர் தொடர்ச்சியாக சர்ச்சையான வழக்குகளை போடுவதில் வல்லவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன் தலைமை நீதிபதிக்கு எதிராக பாலியல் புகாரில், இவர் புகார் கொடுத்தவர்கள் மீதே வழக்கு போட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.