தினகரனுக்கு குக்கர் சின்னம்.. தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம்.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
டெல்லி: டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்குவதா வேண்டாமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆர் கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் அதில் வெற்றி பெற்றார். இதையடுத்து அமமுக என்ற கட்சியை தொடங்கிய அவர் குக்கர் சின்னத்தையே தனக்கு ஒதுக்க வேண்டும் என கோரினார்.
இந்நிலையில் திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல் என அறிவிக்கப்பட்டது. அப்போது அதில் போட்டியிட குக்கர் சின்னத்தை தங்கள் கட்சிக்கு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்கையில் டிடிவி தினகரனின் அமமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது என தெரிவித்திருந்தது. மேலும் பொது பட்டியலில் உள்ள ஒரு சின்னத்தை தனிப்பட்ட கட்சிக்கு உரிமை கோர முடியாது என கூறியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது நீதிபதி கூறுகையில் இப்போதுள்ள நிலையில் தினகரனுக்கு குக்கர் சின்னத்தை வழங்க உத்தரவிட இயலாது. டெல்லி ஹைகோர்ட்டில் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்ன வழக்கை 4 வாரத்தில் முடிக்க வேண்டும்.
அவ்வாறு 4 வாரத்திற்குள் வழக்கை முடிக்காவிட்டால் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்கலாமா வேண்டாமா என்பதில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.