எம்எல்ஏக்களை கட்டாயப்படுத்த கூடாது.. உச்சநீதிமன்ற தீர்ப்பால் நாளை கவிழுகிறது கர்நாடக அரசு?
டெல்லி: அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு காரணமாக, நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக அரசு கவிழ போவது ஏறத்தாழ உறுதியாகி உள்ளது.
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக குமாரசாமி பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 13 எம்எல்ஏக்களும், மஜத கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏக்களும்.. ஆக மொத்தம் 16 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். ஆனால் இவர்களில் யாருடைய ராஜினாமா கடிதத்தையும் சபாநாயகர் ரமேஷ்குமார் இதுவரை ஏற்கவில்லை.
கர்நாடகா: ஜூலை 6 முதல் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரை... பரபரப்பு அரசியல் திருப்பங்கள்!
தலைமை நீதிபதி அமர்வு
இந்த நிலையில்தான், ராஜினாமா செய்ததில், 15 எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தை அணுகினர். தங்கள் ராஜினாமா கடிதங்களை மீது சபாநாயகர் விரைந்து முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும், கேட்டறிந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு, இன்று தனது தீர்ப்பை வழங்கியது.
சபாநாயகர் அதிகாரம்
கர்நாடக சபாநாயகருக்கு எம்எல்ஏக்களின் ராஜினாமா விவகாரத்தில் எப்போது முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது. அது சபாநாயகரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. நியாயமான காலவரையறைக்குள் சபாநாயகர் அந்த முடிவை எடுக்க வேண்டும், என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.
எம்எல்ஏக்களை கட்டாயப்படுத்த முடியாது
இந்த தீர்ப்பில், மற்றொரு அம்சம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது என்னவென்றால், ராஜினாமா கடிதங்களை கொடுத்து, அதன் முடிவுக்காக காத்திருக்கக் கூடிய எம்எல்ஏக்கள், சட்டசபைக்கு வந்தே ஆகவேண்டும் என்று யாரும் வற்புறுத்த முடியாது. அது எம்எல்ஏக்களின் விருப்பத்தை பொருத்தது, என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
விப் உத்தரவு பொருந்தாது
முதல்வர் குமாரசாமி தானாக முன்வந்து, நாளை வியாழக்கிழமை, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப் போவதாக அறிவித்திருந்தார். அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு விப் உத்தரவை பிறப்பித்து அவர்களை கட்டாயம் சட்டசபைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பது, ஆளும் கட்சியின் திட்டமாக இருந்தது. ஒரு வேளை, உத்தரவை மீறினால், அந்த எம்எல்ஏக்களை கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யமுடியும், என்பதால் பயந்து போய் அவர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வருவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே விப் உத்தரவு அவர்களுக்கு பொருந்தாது என்பது திட்டவட்டமாக தெரிந்து போய்விட்டது.
குமாரசாமி ஆட்சி
எனவே நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, குமாரசாமி அரசு கவிழப்போவது, ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. ஒருபக்கம், சபாநாயகரின் முடிவெடுக்கும் அதிகாரத்தில் தாங்கள் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தாலும், மற்றொரு பக்கம், அதிருப்தி எம்எல்ஏக்களை சட்டசபைக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது, என்ற தீர்ப்பின் அம்சத்தின் மூலம், இந்த தீர்ப்பு அரசுத் தரப்புக்கு பெரும் அடி என்று பார்க்கப்படுகிறது.