மக்களின் கணினியை வேவு பார்ப்பது சரியா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
மக்களின் எலக்ட்ரானிக் சாதனங்களை அரசு கண்காணிப்பதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
டெல்லி: மக்களின் எலக்ட்ரானிக் சாதனங்களை அரசு கண்காணிப்பதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன் நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும், செல்போன்களையும் கண்காணிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்காக மத்திய அரசு மற்றும் அரசு சாரா 10 அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இந்த அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகம் அளித்தது. சிபிஐ, உளவுத்துறை, அமலாக்க துறை, மத்திய நேரடி வரிகள் வாரியம் உள்ளிட்ட 10 மத்திய அரசு மற்றும் அரசு சாரா அலுவலகங்களுக்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.
மத்திய அரசு வழங்கி இருக்கும் புதிய அனுமதியின் மூலம் மக்கள் அவர்களுக்கு தெரியாமலே கண்காணிக்கப்படுவார்கள். அரசு நினைக்கும் யாருடைய கணினியையும் இதன் மூலம் கண்காணிக்க முடியும்.
இந்த நிலையில் இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா இந்த வழக்கை தொடுத்து இருந்தார். அரசு கொண்டு வந்திருக்கும் இந்த சட்டம் மக்களின் சுதந்திரத்திற்கு எதிரானது, நீதிமன்றம் இதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 6 வாரத்திற்குள் இதில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது எதனால், இதனால் மக்களின் சுதந்திரம் பறிபோகுமா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.