குஜராத்: 33 முஸ்லிம்களை உயிரோடு எரித்து கொன்ற 17 குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்
டெல்லி: 2002-ல் குஜராத்தில் கோத்ரா வன்முறைக்குப் பின்னர் 33 முஸ்லிம்களை உயிரோடு எரித்து கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 17 குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது. மேலும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டோர் ஆன்மீகம் மற்றும் சமூக பணிகளில் ஈடுபட உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
குஜராத்தில் 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ல் கோத்ரா ரயில் எரிக்கப்பட்ட சம்பவத்தில் 59 பேர் பலியாகினர். இதில் பெரும்பாலானோர் கரசேவகர்கள். இதற்கு பழிவாங்கும் வகையில் குஜராத் முழுவதும் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.
உலகையே உலுக்கியது குஜராத் படுகொலை சம்பவங்கள். இதனால் அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடிக்கு அமெரிக்கா தடை விதித்தும் இருந்து. கோத்ரா ரயில் எரிப்புக்குப் பின்னர் 2002ம் ஆண்டு பிப்ரவரி 28-ல் மெக்சனா மாவட்டத்தில் 33 முஸ்லிம்கள் ஒரே வீட்டில் உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை
மெக்சனா மாவட்டம் விஜபூர் தாலுகா சர்தார்புரா என்ற இடத்தில் உயிரை பாதுகாக்க இப்ராகிம் ஷேக் என்பவரது வீட்டில் முஸ்லிம்கள் தஞ்சமடைந்தனர். இதனை தெரிந்து கொண்ட வன்முறை கும்பல், அந்த வீட்டை பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது. இதில் 22 முஸ்லிம் பெண்கள் உட்பட 33 பேர் உயிரோடு கருகி சாம்பலாகினர். இது தொடர்பாக உச்சநீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. கோத்ரா ரயில் எரிப்புக்குப் பிந்தைய வன்முறைகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு நடத்திய 9 வழக்குகளில் இதுவும் ஒன்று.
76 பேர் கைது
நெஞ்சை பதற வைக்கும் சர்தாபுரா படுகொலை வழக்கில் 76 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 2 பேர் விசாரணையின் போது உயிரிழந்தனர். ஒருவர் மைனர் என்பதால் விடுவிக்கப்பட்டார். எஞ்சிய 73 பேர் மீது 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் கீழ்நீதிமன்றம் 42 பேரை விடுதலை செய்தது. 31 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது.
எஸ்ஐடி அப்பீல்
கீழ்நீதிமன்றத்தில் 42 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிறப்பு புலனாய்வு விசாரணை குழு குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்தது. ஆனால் கீழ்நீதிமன்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. பின்னர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் 31 பேரில் 14 பேர் விடுவிக்கப்பட்டனர். 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் மன்னு
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 17 பேரும் மேல்முறையீடு செய்தனர். இம்மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் ஆயுள் தண்டனை கைதிகள் 17 பேரும் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் 17 பேருக்கும் ஜாமீன் கொடுத்துள்ளது.
உச்சநீதிமன்றம் நிபந்தனைகள்
ஜாமீன் பெற்ற 17 பேரும் மத்திய பிரதேசத்தின் இந்தூர் மற்று ஜபல்பூரில் தங்கியிருக்க நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள 17 பேரும் ஆன்மீகம் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.