'மம்தா மீம்ஸ்' மன்னிப்பு கேட்க தேவையில்லை.. பாஜக நிர்வாகிக்கு ஜாமின் கொடுத்த உச்சநீதிமன்றம்
டெல்லி: பிரியங்கா சோப்ராவின் படத்தை மார்ப்பிங் செய்து மம்தா பானர்ஜியை பரட்டை தலையுடன் பேய் போல் உருவகப்படுத்திய பாஜக இளைஞரணி நிர்வாகிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரியங்கா சோப்ராவின் தலை முடியை கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் கடந்த வாரம் மீம்ஸ்கள் பறந்தன. அப்படி ஒரு மீம்ஸை மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை மிக மோசமாக உருவப்படுத்தி இருந்தார் பாஜக இளைஞரணி பெண் நிர்வாகி குமாரி சர்மா. இந்த மீம்ஸ் இந்தியா முழுவதும் வைரலானது.
இதையடுத்து பாஜக நிர்வாகி ராஜ் குமாரி சர்மாவை மேற்கு வங்க போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ராஜ் குமாரி சர்மா தன்னை ஜாமினில் விட மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார்.
அவரது மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தவறான மார்ப்பிங் விவகாரத்துக்காக ராஜ் குமாரி சர்மா, மேற்க வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டு ராஜ் குமாரி சர்மாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.இந்நிலையில் சிறிது நேரத்தில் மன்னிப்பு கேட்க தேவையில்லை என நிபந்தனையை ரத்து செய்து ஜாமின் வழங்கி உள்ளது.
மேலும் ஒரு அரசியல் நையாண்டி பதிவுக்காக அரசியல் கட்சியினர் மீது வழக்கு தொடர்ந்து ஏன் என்பது குறித்து பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் மேற்கு வங்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.