ஐ.என்.எக்ஸ் மீடியா : சிபிஐ வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீனில் விடுதலை- அமலாக்கப்பிரிவு காவல் தொடரும்!
Recommended Video
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அதேநேரத்தில் அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் ப. சிதம்பரம் தொடர்ந்தும் சிறையில் இருப்பார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுத்ததில் முறைகேடு நடந்தது என்பது சிபிஐ வழக்கு. இவ்வழக்கில் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ந் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது, இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடியானது.
சிபிஐ கடும் எதிர்ப்பு
இதனால் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ப. சிதம்பரம் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் ப. சிதம்பரத்தை ஜாமீனில் விடுவிக்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சாட்சிகளை கலைப்பார்
ப. சிதம்பரத்தை ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளைக் கலைத்துவிடுவார்; அதனால் அவரது ஜாமீன் மனுவை நிராகரிக்கவேண்டும் என சிபிஐ வாதிட்டது.
உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை- நாளை மறுதினம் ஒத்திவைப்பு
ஜாமீன் கொடுத்த உச்சநீதிமன்றம்
இம்மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, போபண்ணா, ரிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இன்று ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நிபந்தனை ஜாமீன்
கைது செய்யப்பட்டு 61 நாட்களுக்கு பின்னர் ஒரு வழக்கில் மட்டும் சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது. சில நிபந்தனைகளின் அடிப்படையில் இன்று சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது.
நிபந்தனைகள் விவரம்
"வேறு வழக்குகளில் ப.சிதம்பரம் கைது செய்யப்படாத நிலையில் ரூ1 லட்சம் பிணைத் தொகை செலுத்தி அவரை விடுதலை செய்யலாம்; சிபிஐ விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்; வெளிநாட்டுக்கு செல்லக் கூடாது ஆகிய நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சிதம்பரத்திடம் விசாரணை
ப. சிதம்பரம் தமது பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதேநேரத்தில் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சிறையில் இருப்பார் சிதம்பரம்
ப.சிதம்பரத்துக்கான அமலாக்கப்பிரிவின் காவல் வரும் 24-ந் தேதிதான் முடிவடைகிறது. அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் ப. சிதம்பரம் தொடர்ந்து சிறையில் இருப்பார்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
இதனிடையே ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனர்களில் ஒருவரான இந்திராணி முகர்ஜி அரசுத் தரப்பு சாட்சியாக மாறினார். இக்குற்றப்பத்திரிகை மீதான விசாரணைக்காக வரும் 24-ந் தேதி சிதம்பரத்தை நீதிமன்றத்தில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றப்பத்திரிகை மீது விசாரணை தொடக்கம்