ராதாபுரம்.. மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை... ஆனால் முடிவை வெளியிடக்கூடாது.. உச்சநீதிமன்றம்
டெல்லி: ராதாபுரம் தொகுதியில் தபால் மற்றும் 3 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் அதன் முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
2016ம் ஆண்டு நடந்த ராதாபுரம் தொகுதி தேர்தலில் அதிமுக சார்பில் இன்பதுரையும், திமுக சார்பில் அப்பாவுவும் போட்டியிட்டனர்.
இதில் இன்பதுரை 69590 வாக்குகளையும், அப்பாவு 69541 வாக்குகளையும் பெற்றனர். அதிமுகவேட்பாளர் இன்பதுரை, அப்பாவுவைவிட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
திமுக வேட்பாளர் வழக்கு
இந்த வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு வழக்கு தொடர்ந்த நிலையில் சர்ச்சைக்குரிய தபால் வாக்குகள் மற்றும் கடைசி மூன்று சுற்று வாக்குகளை எண்ண வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வேட்பாளர்கள் பங்கேற்பு
இதையடுத்து சென்னை நீதிபதியின் உத்தரவுப்படி ராதாபுரம் தொகுதியின் சர்ச்சைக்குரிய தபால் வாக்குகள் மற்றும் கடைசி மூன்ற சுற்று வாக்குப் பெட்டிகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு, நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை மற்றும் திமுக வேட்பாளர் அப்பாத்துரை ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
உச்ச நீதிமன்றம் விசாரணை
இந்நிலையில் ராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி இன்பதுரையின் வழக்கறிஞர் ராஜீவ் ராமச்சந்திரன், உச்ச நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்து இருந்தார்.. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம் இன்று விசாரிப்பதாக நேற்று அறிவித்து இருந்தது.
வாக்கு எண்ண தடையில்லை
இதன்படி இன்று அதிமுக எம்எல்ஏ இன்பத்துரையின் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. அதேநேரம் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது. அடுத்த விசாரணையில் இதனால் வெற்றி பெற்றவர் யாராக இருந்தாலும் முடிவை இப்போதைக்கு தெரிந்து கொள்ள முடியாது. இன்பத்துரையின் மனு மீதான விசாரணையை அக்டோபர் 23ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.