தமிழக கோயில் வளாகங்களில் கடைகளை வைத்து கொள்ளலாம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி
கோயில்களில் கடைகளை அகற்ற சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
டெல்லி: தமிழக கோயில்களில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டபத்தில் போன வருடம் பிப்ரவரி மாதம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில் அங்கிருந்த 19 கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. அத்துடன், தீ விபத்து ஏற்பட்ட மண்டபத்தின் மேற்கூரைகள், தூண்கள் முற்றிலும் சேதம் அடைந்தன.
இதனால் கோவில்களில் கடைகளை யாரும் நடத்தக்கூடாது என்றும், இருக்கும் கடைகளை அகற்ற வேண்டும் என்றும் சொல்லி, தமிழக அரசு மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு போடப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த கடைக்காரர்களும், தங்கள் கடைகளை காலி செய்ய அவகாசம் கேட்டு பதில் மனுவை தாக்கல் செய்தனர்.
இதனை ஏற்ற கோர்ட்டும், அவர்களுக்கு கால அவகாசத்தை ஜனவரி 31 வரை நீட்டித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மதுரை ஹைகோர்ட் விதித்த கெடு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.