யாருக்கு அதிகாரம்.. கிரண் பேடி கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்.. புதுவை அரசுக்கும் செக்!
டெல்லி: புதுவை அமைச்சரவை கூட்ட முடிவுகளை 10 நாட்களுக்கு அமல்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
புதுவையில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் புதுவை முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே அதிகார போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் புதுவை அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளில் துணை நிலை ஆளுநர் தலையிடுகிறார்.
அத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை கலந்தாலோசிக்காமல் அதிகாரிகளுக்கு அவராகவே தன்னிச்சையாக உத்தரவுகளை பிறப்பிக்கிறார் என குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே கடந்த 2017-ஆம் ஆண்டு புதுவை யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடும் வகையில் அரசு ஆவணங்களைக் கோர துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
அதிகாரம்
இதை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் கடந்த மே 1-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் புதுவை யூனியன் பிரதேச அரசின் நிர்வாகியான துணை நிலை ஆளுநர் புதுவை மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ அந்த முடிவுகளின் அடிப்படையில் தான் செயல்பட முடியும். துணை நிலை ஆளுநருக்கென்று தனி அதிகாரம் ஏதும் இல்லை என தீர்ப்பளிக்கப்பட்டது.
கிரண்பேடி
இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும் வரும் ஜூன் 7-ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அமல்படுத்தக் கூடாது என கோரியும் கிரண்பேடி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
புதுவை அரசு
அந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கிரண்பேடியின் கோரிக்கை நீதிபதிகள் நிராகரித்தனர். எனினும் புதுவை அமைச்சரவை கூட்ட முடிவுகளை 10 நாட்களுக்கு அமல்படுத்த கூடாது என புதுவை அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நாராயணசாமிக்கு நோட்டீஸ்
மேலும் இது தொடர்பாக நாராயணசாமி வரும் 21-ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் 21-ஆம் தேதி இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.