69% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு- தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69% இடஒதுக்கீடுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது. இது தொடர்பான தமிழக அரசின் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டு இந்திய அரசியல் சாசனம் 31பி, 31 சி பிரிவுகளின் கீழ் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு இது சாத்தியமானது.
ஆனால் இந்திரா சகானி வழக்கில், மாநிலங்கள் 50%க்குள்தான் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை அடிப்படையாக கொண்டு தமிழகத்தின் 69% இடஒதுக்கீடு முறைக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இதேபோல் உச்சநீதிமன்றத்தில் சிவி காயத்ரி என்ற மாணவி சார்பாக அவரது தந்தை எஸ். வைத்தீஸ்வரன் 69% இடஒதுக்கீடு முறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது.
மாணவி காயத்ரி சார்பாக வழக்கறிஞர் ஜி. சிவபால முருகன் ஆஜரானார். அப்போது, தமிழக அரசின் 69% இடஒதுக்கீடு முறையால் பொது பட்டியல் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக வழக்கறிஞர் சிவபாலமுருகன் வாதிட்டார். இதனையடுத்து 2 வாரங்களுக்குள் தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.