நீங்க அப்படி செய்ய கூடாது.. இல்லை செய்வோம்.. அரசு தரப்பை கிழித்து தொங்கவிட்ட நீதிபதி ஜோசப்!
டெல்லி ஷாகீன் பாக் வழக்கில் இன்று அரசு தரப்பு வழக்கறிஞருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் இடையில் காரசாரமான விவாதம் நடந்தது.
டெல்லி: டெல்லி ஷாகீன் பாக் வழக்கில் இன்று அரசு தரப்பு வழக்கறிஞருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் இடையில் காரசாரமான விவாதம் நடந்தது.
டெல்லியில் கலவரம் நொடிக்கு நொடி தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் டெல்லியில் ஷாகீன் பாக் பகுதியில் நடக்கும் போராட்டத்திற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ஷாகீன் பாக் பகுதியில் போராடும் மக்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிபதிகள் சஞ்சய் கிஷான் கவுல் , கே எம் ஜோசப் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர்.
டெல்லி கலவரம்.. விசாரணை நடத்தப்போகிறோம்.. கமிஷனர் இங்கு இருக்க வேண்டும்.. ஹைகோர்ட் அதிரடி
ஏற்கவில்லை
இந்த ஷாகீன் பாக் வழக்கில் இன்று டெல்லி கலவரம் குறித்தும் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது. முன்னதாக ஷாகீன் பாக் வழக்குடன் சேர்த்து டெல்லி கலவரம் குறித்தும் விசாரிக்க வேண்டும். இது தொடர்பாக சிறப்பு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. பீம் ஆர்மியின் சந்திரசேகர் ஆசாத் உள்ளிட்ட சிலரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.
இல்லை
இந்த மனுவை நாங்கள் விசாரிக்க முடியாது. டெல்லி கலவரத்திற்கு ஷாகீன் பாக் போராட்டத்திற்கும் தொடர்பில்லை. டெல்லி கலவரம் குறித்து டெல்லி ஹைகோர்ட் விசாரிக்கும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். அதேபோல் ஷாகீன் பாக் குறித்து இப்போது விசாரிக்க முடியாது. டெல்லியில் நிலைமை சரியில்லை. ஹோலி விடுமுறைக்கு பின் இதை விசாரிப்போம் என்று நீதிபதிகள் கூறினார்கள்.
என்ன எதிர்ப்பு
இதற்கு அரசு தரப்பு சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா எதிர்ப்பு தெரிவித்தார். டெல்லியின் நிலைமையை சுட்டி காட்டியதற்கு துஷார் மேத்தா ''நீங்கள் அப்படி செய்ய கூடாது. டெல்லி கலவரத்தை உங்கள் உத்தரவில் குறிப்பிட கூடாது'' என்று கோபமாக பேசினார். இதை கேட்டதும் நீதிபதி கே எம் ஜோசப் கோபம் அடைந்தார். அவர் உடனே, இல்லை எங்கள் உத்தரவில் நாங்கள் அதை குறிப்பிடுவோம்.
கடமை என்ன
நாங்கள் எங்கள் கடமையை செய்வோம். நாங்கள் இதை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நான் அதை செய்யவில்லை என்றால் என் கடமையில் இருந்து தவறுவதாக ஆகிவிடும். என்னுடைய முதல் பணி ஜனநாயகத்தை காப்பது, இந்த நாட்டை காப்பதுதான், என்று நீதிபதி கே.எம் ஜோசப் குறிப்பிட்டார். இதற்கு துஷார் மேத்தா அரசின் முதல் பணியும் அதுதான் என்று குறிப்பிட்டார்.
என்ன வாதம்
இதற்கு நீதிபதி கே.எம் ஜோசப் போலீஸ் இதில் தவறு செய்ததை சுட்டிக்காட்ட வேண்டும். போலீஸ் மீது நிறைய தவறு இருக்கிறது. போலீஸ் கொஞ்சம் கூட நேர்மையாக செயல்படவில்லை. இங்கிலாந்து, அமெரிக்க போலீஸ் போல டெல்லி போலீஸ் கடுமையாக செயல்படவில்லை என்றார். இதற்கு துஷார் மேத்தா, போலீஸ் கடுமையாக செயல்பட்டால் அதை நீங்கள்தான் முதலில் கண்டிக்கிறீர்கள், என்று வாதம் வைத்தார். இதனால் உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடைசியில் ஷாகீன் பாக் வழக்கு குறித்து ஹோலி விடுமுறைக்கு பின் இதை விசாரிப்போம் என்று நீதிபதிகள் கூறினார்கள்.