ராணுவத்துக்கு எதிராக பொய்செய்தி பரப்புகிறார்...ஷேக்லா ரஷீத் மீது சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு
டெல்லி: இந்திய ராணுவத்துக்கு எதிராக பொய்யான செய்திகளை பரப்புவதாக மாணவர் இயக்கத்தின் தலைவர் ஷேக்லா ரஷீத் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் நிலவரம் தொடர்பாக ஷேக்லா ரஷீத் தமது ட்விட்டர் பக்கத்தில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதில் அப்பாவிகளை ராணுவம் கொடூரமாக சித்திரவதை செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை ராணுவத் தரப்பு திட்டவட்டமாக மறுத்தது. இந்நிலையில் ஷேக்லா ரஷீத் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் அலாக் அல்லோக் ஶ்ரீவஸ்தவா இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், இந்திய ராணுவத்துக்கு எதிராக பொய் செய்திகளை ஷேக்லா ரஷீத் பரப்புகிறார். சர்வதேச அளவில் இந்தியாவின் நன்மதிப்புக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.
தேசதுரோக பிரிவான 124-ஏவின் கீழ் ஷேக்லா ரஷீத் மீது நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இருக்கிறது. மேலும் இருபிரிவினரிடையே மோதலும் தூண்டும் வகையில் 153, 153-ஏ, 504, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றங்களை செய்திருக்கிறார். ஆகையஅல் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.