மிக முக்கிய கட்டத்தில் சிஏஏ வழக்கு.. மிக விரைவில் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட வாய்ப்பு!
சிஏஏவிற்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள 144 வழக்குகளும் பெரும்பாலும் அடுத்த மாதம் அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
Recommended Video
டெல்லி: சிஏஏவிற்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள 144 வழக்குகளும் பெரும்பாலும் அடுத்த மாதம் அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி போப்டே இது தொடர்பாக இன்று முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
நாடு முழுக்க குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு எதிராக திமுக, மக்கள் நீதி மய்யம், இந்தியன் முஸ்லீம் லீக், காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரின் வழக்குகள் உட்பட மொத்தம் 144 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, நீதிபதிகள் பிஆர் கவாய், சூர்யா காந்த் ஆகியோர் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கில் உடனடியாக சட்டத்திற்கு தடை விதிக்க மனுதாரர் தரப்பு கோரிக்கை வைத்தது. ஆனால் உடனடியாக சட்டத்திற்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
எத்தனை பேர்
இந்த வழக்கில் 144 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். ஆனால் 60 பேரின் மனுக்கள் மட்டுமே எங்களிடம் வந்துள்ளது . இன்னும் மீதம் உள்ள மனுக்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று அரசு தரப்பு சார்பாக வாதம் செய்த அட்டர்னி ஜெனரல் கே கே வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
அவகாசம்
இதனால் எங்களுக்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார். இதனால் அரசு தரப்பு 4 வாரம் அவகாசம் அளிக்கப்பட்டது. அதேபோல் இந்த வழக்கில் காங்கிரஸ் உள்ளிட்ட மனுதாரர்கள் தரப்பில் வாதம் செய்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்த வழக்கில் நிறைய மனுக்கள் உள்ளது. சட்டமாக நிறைவேற்றப்பட்ட மசோதா குறித்து இந்த மனுக்கள் கேள்வி எழுப்புகிறது.
பெரிய அமர்வு
அதனால் இதில் சட்டம் குறித்து முக்கிய விவாதம் நடத்த வேண்டும். பல மாநிலங்கள் இதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதனால் இதை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும். இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்று கபில் சிபல் கோரிக்கை வைத்தார்.
பின் முடிவு
இதை கேட்ட தலைமை நீதிபதி போப்டே, இந்த வழக்கை அரசியல் சாசன அமர்விற்கு மாற்ற வாய்ப்புள்ளது. முதலில் இந்த வழக்கு தொடர்பாக, 4 வாரத்தில் மத்திய அரசு பதில் விளக்கம் அளிக்கட்டும். பிறகு இந்த வழக்கு தொடர்பாக முடிவு எடுக்கலாம் என்று போப்டே குறிப்பிட்டுள்ளார். இதனால் பெரும்பாலும் வழக்கு அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது.