கடன் தவணை தள்ளிவைப்பு காலத்திற்கு வட்டி.. மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: கடன் தவணை செலுத்துவதற்கு வழங்கப்பட்ட 3மாத அவகாசத்துக்கும் வட்டி வசூலிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்குமாறு மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வேலைக்கு செல்லாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
இதையடுத்து ரிசர்வ் வங்கி, கடன் தவணையை திருப்பி செலுத்த 3மாதம் அவகாசம் அளித்து கடந்த மார்ச் 27 மதேதி உத்தரவிட்டது. அந்த அவகாசத்தை அண்மையில் ஆகஸ்ட் 31 வரை மேலும் 3மாதங்களுக்கு ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது.
ஆனால் கடன் தவணையை திருப்பிச் செலுத்த வழங்கப்பட்டுள்ள அந்த அவகாச காலத்திற்கும் வங்கிகள் வட்டி வசூலிக்கின்றன. இந்த வட்டி வசூலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆக்ராவைச் சேர்ந் கஜேந்திர சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், கடனை திருப்பி செலுத்த வழங்கப்பட்ட காலத்திற்கும் வட்டி வசூலிக்கக்கூடாது என்றும், இதை உறுதி செய்ய மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும் லாக்வுடன் காலத்தில் கடனுக்கான வட்டி வசூலிப்பது கடினமான சூழலை ஏற்படுத்துவதுடன், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 21ன் கீழ் வழங்கப்படும் வாழ்வாதார உரிமையை தடுப்பதாக இருக்கும் என்று மனுவில் கஜேந்திர சர்மா குறிப்பிட்டிருந்தார்.
கொரோனா தடுப்பூசி அப்பேட்.. குரங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனை வெற்றி.. மனிதர்களுக்கும் பரிசோதனை
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்கே, கௌல், எம்.ஆர்.ஷர்மா ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை காணொளி வாயிலாக விசாரித்த நீதிபதிகள் அமர்வு, இது தொடர்பாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. வழக்கின் விசாரணையை ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளது.