சிபிஐ, என்ஐஏ, அமலாக்க அலுவலகங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: சிபிஐ, என்ஐஏ, அமலாக்கத் துறை உள்ளிட்ட விசாரணை அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
காவல் நிலையத்தில் கைதிகள் அடித்து துன்புறுத்துவதாக எழுந்த புகாரை அடுத்து உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி ஆர் எஃப் நாரிமன் தலைமையிலான நீதிபதிகள் கே எம் ஜோசப், அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறுகையில் சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத் துறை இயக்குநரகம், போதை தடுப்பு பிரிவு, வருவாய் உளவுத் துறை, தீவிர மோசடி விசாரணை அலுவலகம் (SFIO) உள்ளிட்ட விசாரணை அலுவலகங்களில் கட்டாயம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
இங்கு மட்டுமல்லாமல் எங்கெல்லாம் கைதிகளை அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட முடியுமோ அங்கெல்லாம் சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டும். அவை நன்றாக தரம் வாய்ந்த கேமராக்களாக இருத்தல் வேண்டும்.
அடுத்த 5 மணி நேரத்திற்கு மிக கனமழை.. 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
ஜனவரி 27-ஆம் தேதிக்குள் உரிய விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என கடந்த 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதிலும் அந்த கேமராக்கள் இரவு நேரத்திலும் தெளிவாக தெரியும் வகையில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
குறிப்பாக ஒவ்வொரு காவல் நிலையங்களின் நுழைவு வாயில், வெளியேறும் வாயில், முக்கிய நுழைவுகள், காத்திருப்பு பகுதி, வரவேற்பறை, சிறைகள் என ஒரு இடம் விடாமல் கேமராக்களை பொருத்த வேண்டும்.
அந்த சிசிடிவி மூலம் ஆடியோ, வீடியோ நன்றாக பதிவு செய்யப்பட வேண்டும். மத்திய அரசு, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அத்தகைய சிசிடிவி கேமராக்களை வாங்க வேண்டும் என்றும் அதிகபட்சம் ஒரு ஆண்டுக்கு அதில் உள்ள பதிவுகளை எடுக்க வசதி செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.