ம.பி. கமல்நாத் அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கமல்நாத் அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டு ராஜினாமா செய்வதாக 22 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அறிவித்தனர். இதனால் கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்தது.
இதையடுத்து கமல்நாத் அரசு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டார். ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பால் சபாநாயகர் சட்டசபையை கூட்டவில்லை.
இந்த முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இந்த விசாரணையை நடத்தியது. இந்த விசாரணையின் போது பெங்களூரில் கடத்தி வைக்கப்பட்ட எம்.எல்.ஏக்களை முதலில் அழைத்துவர வேண்டும் என்று கமல்நாத் தரப்பு வாதிட்டது.
மேலும் சட்டசபையில் பெரும்பான்மை யாருக்கு என்பதை நீதிமன்றங்கள் தீர்மானிக்க முடியாது எனவும் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மத்திய பிரதேச சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்த வாக்கெடுப்பை ரகசியமாக நடத்தக் கூடாது; அனைவரும் கைகளை உயர்த்தக் கூடிய முறையை பின்பற்ற வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.