நிர்மலா தேவி வழக்கில் முருகன், கருப்பசாமிக்கு ஜாமீன்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
டெல்லி: விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவிகளை தவறாக அழைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு உடந்தையாக இருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.
அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணித துறை பேராசிரியராக பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி. இவர் கடந்த ஆண்டு கல்லூரி மாணவிகளிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள உயரதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு மாணவிகளை மூளைச்சலவை செய்து சிக்கினார்.
இது தொடர்பான ஆடியோவை அந்த மாணவிகள் வெளியிட்டனர். இதையடுத்து நிர்மலா தேவி கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். அவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் கருப்பசாமி மற்றும் முருகன் கேட்டதன் பேரில் தான் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக நிர்மலா தேவி வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் தனது கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என அவரது மனைவி புகார் தெரிவித்திருந்தார். அது போல் கருப்பசாமியும், முருகனும் சிறையில் தங்களுக்கு ஆபத்திருப்பதாக தெரிவித்தனர்.
இவர்கள் இருவரும், நிர்மலா தேவியும் தொடர்ந்து ஜாமீன் கோரி வந்தனர். ஆனால் விசாரணை நீதிமன்றமும் ஜாமீன் தரவில்லை. ஹைகோர்ட்டும் தரவில்லை. இதையடுத்து முருகன், கருப்பசாமி ஆகிய இருவரும் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்தனர்.
அதன் மீதான விசாரணை இன்று வந்தது. அப்போது இருவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி நாரிமன் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.