திகார் சிறையில் ப.சிதம்பரத்தை அடைக்க இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் உத்தரவு
Recommended Video
டெல்லி: சிபிஐ காவலுக்கு எதிராக ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் உடனடியாக ஜாமீன் மனுவை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவ்வாறு ஜாமீன் கிடைக்காவிட்டால் வரும் வியாழக்கிழமை வரை சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளனர்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முறைகேடு செய்ததாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டப்பட்டார். பின்னர் சிபிஐ அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அவரை 10 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே சிபிஐ காவலை எதிர்த்து ப. சிதம்பரம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 10 நாட்கள் சிபிஐ காவல் முடிந்த நிலையில் அவர் கடந்த 30-ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ப. சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் காவலில் எடுக்க சிபிஐ கோரிக்கை விடுத்தது.
அப்போது ஏற்கெனவே சிபிஐ காவலில் எடுக்க 10 நாட்கள் கொடுத்தாகிவிட்டது. தற்போது மீண்டும் 5 நாட்கள் கேட்கிறீர்கள். இதை நீங்கள் ஏன் தொடக்கத்திலேயே 15 நாட்களாக கேட்டிருக்க கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் இப்படியே போனால் நீங்கள் ஒரு மாதம் கூட காவலில் எடுக்க அனுமதி கேட்பீர்கள் என்றும் நீதிபதி கடிந்து கொண்டார்.
இதையடுத்து சிபிஐ காவலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணை நடக்கிறது. அதனால் அதுவரை சிபிஐ காவலில் இருக்க பிரச்சினை ஏதும் இல்லை என சிதம்பரம் தரப்பு தெரிவித்ததை அடுத்து அவர் சிபிஐ காவலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்றுடன் சிதம்பரத்துக்கான சிபிஐ காவல் முடிவடைகிறது. சிபிஐ காவலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பு தொடர்ந்த வழக்கு விசாரணை தொடங்கியது. அவர் வழக்கு விசாரணைக்காக உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது ப.சிதம்பரம் தரப்பில் வழக்கறிஞர் கபில் சிபல் கூறுகையில் ப. சிதம்பரத்தை வீட்டுக் காவலுக்கு அனுப்புங்கள். அமலாக்கத் துறை வழக்கில் முன்ஜாமீன் தொடர்பாக வெள்ளிக்கிழமை தீர்ப்பு வருகிறது.
எனவே இந்த 3 நாட்களுக்கு ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுங்கள். இல்லாவிட்டால் கடும் நிபந்தனைகளுடன் வீட்டுக்காவலில் வையுங்கள். வெறும் 3 நாட்கள்தான் கேட்கிறேன். இந்த 3 நாட்களில் உலகம் ஒன்றும் தலைகீழாக மாறிவிடாது என கபில் சிபல் வாதம் செய்தார்.
ஆனால் நீதிபதிகளோ இதை ஏன் நீங்கள் சிபிஐ நீதிமன்றத்தில் முறையிடக் கூடாது என கேள்வி எழுப்பினர். மேலும் நீதிபதிகள் கூறுகையில் கீழமை நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் உடனடியாக ஜாமீன் மனுவை தாக்கல் செய்யலாம். அவரது மனுவை கீழமை நீதிமன்றம் உடனடியாக விசாரிக்க வேண்டும். ஒரு வேளை ஜாமீன் கிடைக்காவிட்டால் வரும் வியாழக்கிழமை வரை அவரை சிபிஐ காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
வீட்டுக் காவலில் வையுங்கள். இல்லாவிட்டால் இடைக்கால ஜாமீன் கொடுங்கள் என சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்ட நிலையில் உச்சநீதிமன்றமோ இதுபோன்று ஒரு உத்தரவை வெளியிட்டது.