அயோத்தி வழக்கு: அனைத்து தரப்பும் வாதங்களை அக்.18-க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
Recommended Video
டெல்லி: அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் அனைத்து தரப்பும் தங்களது வாதங்களை அக்டோபர் 18-ந் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராம் லல்லா, நிர்மோகி அகாடா மற்றும் சன்னி வக்ஃபு வாரியம் ஆகியவை சமமாக பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று 2010-ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இம்மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வருகிறது. முன்னதாக இப்பிரச்சனைக்கு தீர்வு காண 3 பேர் கொண்ட மத்தியஸ்த குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்திருந்தது. ஆனால் மத்தியஸ்த குழுவால் பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை.
இலங்கை அதிபர் தேர்தல்: ரணிலின் வேட்பாளர் கனவு 'டமால்'.. களத்தில் சஜித பிரேமதாச
இதையடுத்து கடந்த மாதம் 6-ந் தேதி முதல் நாள்தோறும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இன்று 32-வது நாளாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
இன்றைய விசாரணையின் போது, அக்டோபர் 18-ந் தேதிக்குள் அனைத்து தரப்புகளும் தங்களது வாதங்களை நிறைவு செய்ய வேண்டும்; அதற்கு பின்னர் எந்த தரப்புக்கும் அனுமதி அளிக்கப்படாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டிருக்கிறது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.