4 மடங்கு ஆக்சிஜன் கூடுதலாக வாங்கிய டெல்லி அரசு; 12 மாநில பாதிப்புக்கு காரணம்- உச்சநீதிமன்ற குழு
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா உச்சகட்ட பாதிப்பை ஏற்படுத்திய போது கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு தேவையைவிட 4 மடங்கு ஆக்சிஜனை கூடுதலாக வாங்கி வைத்துக் கொண்டது; இதனால் 12 மாநிலங்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்பட்டன என்று உச்சநீதிமன்ற குழு குற்றம்சாட்டியுள்ளது.
கொரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன் சப்ளை தொடர்பாக ஆராய்வதற்காக எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா தலைமையில் உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது. இந்த குழுவில் டெல்லி அரசின் முதன்மை உள்துறை செயலர் பூபிந்தர் பல்லா, மேக்ஸ் இயக்குநர் சந்தீப் புத்திராஜா, மத்திய நீர்வளத்துறை இணை செயலர் சுபோத் யாதவ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
ஆக்சிஜன் சப்ளை கட்டானதால் 16 பேர் இறக்கவில்லை.. ஆக்ரா மருத்துவனை மீது தவறு இல்லை. விசாரணை குழு
4 மடங்கு ஆக்சிஜன்
இந்த குழு உச்சநீதிமன்றத்தில் தமது அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது. அதில் டெல்லி அரசுக்கு தேவையான ஆக்சிஜன் என்பது 284 முதல் 372 மெட்ரிக் டன்னாக மட்டுமே இருந்தது. ஆனால் இதனைப் போல 4 மடங்கு ஆக்சிஜன் அதாவது 1,140 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வாங்கி வைத்துக் கொண்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
12 மாநிலங்களுக்கு பிரச்சனை
அத்துடன் இப்படி டெல்லி அரசு கூடுதலான ஆக்சிஜனை வாங்கி வைத்துக் கொண்டதால் 12 மாநிலங்கள் பற்றாக்குறையை சந்திக்க நேரிட்டது என்றும் இந்த குழு குற்றம்சாட்டியுள்ளது. டெல்லியில் உள்ள சிங்கால் மருத்துவமனை, அருணா ஆசிப் அலி மருத்துவமனை, ஈஎஸ்ஐசி மருத்துவமனை, லைப்ரே மருத்துவமனை ஆகியவற்றில் சில படுக்கைகளே இருக்கின்றன. ஆனால் கூடுதல் ஆக்சிஜன் தேவை என கூறி டெல்லி அரசிடம் வாங்கி வைத்து கொண்டன.
பயன்படுத்தியது குறைவுதான்
இதனால்தான் டெல்லி அரசு கூடுதல் ஆக்சிஜனை கேட்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது என்றும் உச்சநீதிமன்ற குழு சுட்டிக்காட்டியுள்ளது. ஏப்ரல் 29 முதல் மே 10-ந் தேதி வரை டெல்லி அரசுக்கு 350 மெட்ரிக் டன்னுக்கு அதிகமான ஆக்சிஜன் தேவைப்படவே இல்லை என்பதையும் உச்சநீதிமன்றக் குழு தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வரும் 30-ல் விசாரணை
ஏற்கனவே டெல்லிக்கு 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தினமும் சப்ளை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் விசாரணை வரும் 30-ந் தேதி நடைபெற உள்ளது.