எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரம்- கர்நாடகா சபாநாயகருக்கு சுப்ரீம்கோர்ட் சரமாரி கேள்வி
Recommended Video
டெல்லி: எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரத்தில் முடிவு எடுக்காமல் தாமதிப்பது ஏன் என கர்நாடகா சபாநாயகர் கே.ஆர். ரமேஷுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஜேடிஎஸ்- காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்து ஒரு மாதம் ஆகிறது. இந்த ராஜினாமாக்கள் மீது சபாநாயகர் கே.ஆர். ரமேஷ் எந்த முடிவும் எடுக்கவில்லை.
அதேநேரத்தில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளை சபாநாயகர் மேற்கொண்டுள்ளார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.
உச்சநீதிமன்ற விசாரணை
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான பெஞ்ச் முன்னர் நடைபெற்ற இந்த விசாரணையில் எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, சபாநாயகர் தரப்பில் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகி வாதாடினர். முதலில் முகுல் ரோத்தகி தமது கருத்துகளை முன்வைத்தார்.
சபாநாயகருக்கு உத்தரவா?
அப்போது, ராஜினாமா கடிதங்கள் மீது முடிவு எடுக்க வேண்டும் என சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என தலைமை நீதிபதி கோகய் கருத்து தெரிவித்தார். இதையடுத்து அபிஷேக் மனு சிங்வி தமது வாதங்களை எடுத்து வைத்தார்.
உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விகள்
இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி கோகய், சபாநாயகர் ரமேஷூக்கு சரமாரி கேள்விகளை எழுப்பினார். இது தொடர்பாக தலைமை நீதிபதி கோகய் ஊறுகையில், எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதங்கள் கொடுத்துவிட்ட நிலையில் அதன் மீது முடிவு எடுக்க ஏன் இவ்வளவு தாமதம்?
ராஜினாமாவை தபாலில் அனுப்பலாம்
எம்.எல்.ஏக்கள் நீதிமன்றத்துக்கு வரும் வரையில் சபாநாயகர் ஏன் எந்த ஒரு நடவடிக்கையுமே எடுக்கவில்லை? அவரை முடிவு எடுக்கவிடாமல் தடுப்பது எது? எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதங்களை நேரில்தான் தர வேண்டும் என்பது இல்லையே... தபாலில் கூட ராஜினாமா கடிதங்களை அனுப்பலாமே? என கேள்விகள் எழுப்பினார்.