10% இடஒதுக்கீடு வழக்கு.. இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!
டெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு இடைக்கால தடைவிதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
கடந்த குளிர்கால கூட்டத்தொடரில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு இடஒதுக்கீடு அளிக்க சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. உயர் சாதியினர் பயன்பெறும் வகையில் பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்மூலம் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவு எடுத்து உள்ளது. இதற்கான மசோதா இரண்டு அவையிலும் நிறைவேறி சட்டமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமத்துவத்திற்கான இளைஞர்கள் அமைப்பு (Youth For Equality organisation) சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கவுஷால் காந்த் மிஸ்ரா என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இதை விசாரித்தது. இந்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டது.
இந்த நிலையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு இடைக்கால தடைவிதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு 4 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தின் சாதக பாதகங்கள் ஆராயப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.