தேர்வு நேரத்தில் பறக்கும்படையால் ஓவர் தொல்லை.. வழக்கு தொடர்ந்த வக்கீல்.. உச்சநீதிமன்றம் அட்வைஸ்
டெல்லி: தேர்வு எழுதச் செல்லும் மாணவர், மாணவிகளை, பறக்கும் படைகள் துன்புறுத்த கூடாது, அதற்கு வழிகாட்டுதல் நெறிமுறை வழங்க வேண்டும், என்று தொடரப்பட்ட பொது நல வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடருமாறு அட்வைஸ் செய்துள்ளது.
மூத்த வக்கீல் அனுஜா கபூர் தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான, நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் அனிருத்த போஸ் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் மேற்கொண்டு விசாரிக்க மறுப்பு தெரிவித்து விட்டனர். இந்த வழக்கில் ஏதேனும் முடிவு தெரிய அவர் விரும்பினால், டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு சுப்ரீம் கோர்ட் கேட்டுக் கொண்டது.
சட்டீஸ்கரில் 10 ஆம் வகுப்பு படித்த, சிறுமி ஒருவர், பொதுத் தேர்வின்போது நடத்தப்பட்ட பறக்கும்படையின் சோதனையால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.
ஆடைகளை அவிழ்த்து, சோதனை நடத்தியதால், மனமுடைந்து, அந்த சிறுமி இப்படி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
நீட் தேர்வின்போதும், மாணவிகளுக்கு கடுமையான ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. கொண்டையை கூட அவிழ்த்து பறக்கும்படையினர் சோதனை நடத்துகிறார்கள். ஆபரணங்கள் அணியவும் தடை விதிக்கப்படுகிறது.
எனவே இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் எப்படி தீர்ப்பு வழங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் உச்சநீதிமன்றம், இந்த வழக்கை விசாரிக்க மறுத்துள்ளது.