முட்டி மோதியும் ம்ஹூம்- எஸ்.பி.வேலுமணி மீதான 'டெண்டர்' வழக்கை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!
டெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் விசாரணை அறிக்கையை வேலுமணிக்கு வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
அதிமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்தவர் எஸ்.பி.வேலுமணி. அப்போது அரசு ஒப்பந்தங்களை உறவினர்கள் உள்ளிட்டோருக்கு முறைகேடாக வழங்கினார் என்பது வழக்கு. அறப்போர் இயக்கம், திமுக உள்ளிட்டவை சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக ஏற்கனவே தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர். மேலும் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனையும் நடத்தப்பட்டிருந்தது.
இவ்வழக்கில் 10 வாரங்களில் முழுமையாக விசாரணை நடத்தி இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி மேல்முறையீடு செய்தார்.
மேலும் தம் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்ய வேண்டும்; இது தொடர்பான விசாரணை அறிக்கையை தமக்கு தர வேண்டும் என்றும் அம்மனுவில் எஸ்.பி.வேலுமணி கூறியிருந்தார். இம்மனு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின் போது, எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க தடை இல்லை என உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து நடத்தலாம் என்றும் வழக்கு விசாரணை அறிக்கை நகலை வேலுமணிக்கு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.