வேதாந்தாவுக்கு பின்னடைவு.. ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க அனுமதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு பணிக்காக 4 வார காலம் இடைக்காலமாக மீண்டும் திறக்க அனுமதிக்குமாறு வேதாந்தா நிறுவனம் விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்துவிட்டது.
2018ம் ஆண்டு துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிறகு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு எடுத்த நடவடிக்கை நியாயமானதுதான் என்று உத்தரவிட்டு வேதாந்தா நிறுவனத்தின் மனுக்களை தள்ளுபடி செய்தது.
நோட்டீஸ்
இதை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் . சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் மறுத்துவிட்டது. அத்துடன் மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசு உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.
பராமரிப்புப் பணி
இதையடுத்து, தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், "மாசுக் கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றாததால்தான், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூட உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள தற்காலிகமாக அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.
நிலத்தடி நீர்
இதற்கு தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில். மாசு விதிகளை மீறிச் செயல்பட்டதால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் பாரமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கக் கூடாது. கடந்த இரு ஆண்டுகளாக வேதாந்தா நிறுவனம் பல்வேறு நீதிமன்றங்களில் இதுதொடர்பாக முறையிட்டும் எந்த அனுமதியும் தரப்படவில்லை. அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசு உள்ளிட்டவற்றுக்கு இந்த ஆலை முக்கியக் காரணமாக இருந்தது எனவே தான், நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
ஆலையின் பராமரிப்புத் தொடர்பாக உள்ளூர் அளவிலான ஒரு குழுவை அமைத்து அரசு கண்காணித்து வருகிறது. இதனால், வேதாந்தா நிறுவனத்திற்கு என தனியாக பராமரிப்புப் பணிக்கு அனுமதி அளிக்கும் தேவை ஏற்படவில்லை. அண்மையில் ஒரு வல்லுநர் குழுவையும் தமிழக அரசு அமைத்துள்ளது. இக்குழுவினர் அக்டோபர் மாதத்தில் ஆலையை நேரில் சென்று பார்வையிட்டு, தற்போதைய பராமரிப்பு போதுமானது எனத் தெரிவித்திருக்கிறார்கள் என்று தமிழக அரசு தனது பதில் மனுவில் கூறியிருந்தது.
நிராகரிப்பு
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு பணிக்காக 4 வார காலம் திற்கக இடைக்காலமாக மீண்டும் திறக்க அனுமதிக்குமாறு வேதாந்தா நிறுவனம் விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.